BREAKING NEWS

ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முடியாது. அதேநேரம் அந்த அப்படிப்பட்ட போட்டோக்களில் ஒரு திருடன் இருந்துவிட்டால் அதற்கு அந்த அரசியல்வாதி எந்தவகையிலும் பொறுப்புகூற முடியாது இதுதான் யதார்த்தமானதும் உண்மையானதுமாகும்.

இப்படியான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே  ஹக்கீம் அவர்களின் கூட்டங்களில் சஹ்ரான் கலந்துகொண்ட விடயத்தையும் பார்க்கப்பட வேண்டும். அந்தநேரம் சஹ்ரான் என்னும் துரோகி எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றான் என்று சத்தியமாக ஹக்கீமுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது என்பது மட்டுமல்ல இவன் இப்படிப்ட்டவன் என்று ஒரு துளியளவேனும் ஹக்கீமுக்கு தெரிந்திருந்தால் அவனையும் அவனது கூட்டத்தையும் நிச்சயமாக அவர் பக்கத்திலும் சேர்த்திருக்க மாட்டார் என்பதை நூறு வீதம் நம்பலாம்.

இந்த நிலையில்தான் இந்த ஸஹ்ரான் என்ற துரோகியின் கூட்டம் ஏப்பரல் 21ல் மிகப் பயங்கரமான ஒரு செயலைச் செய்தான். இதன் காரணமாக அந்த துரோகி சஹ்ரானுடன் கதைத்தவர்கள், அவனோடு நின்று போட்டோ பிடித்தவர்கள், அவனுடைய சீடியை வைத்திருந்தவர்கள் என்று பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையிலே கிடக்கின்றார்கள். அதேபோன்றுதான் முன்னால் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் அந்த சஹ்ரானுடன் தேர்தல் காலங்களில் ஒன்றாக இருந்து பேசிய போட்டோவை வைத்து இவரும் அவருடைய குருப்பை சேர்ந்தவர்தான் என்று இனவாதிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து சொல்லொன்னா துயரத்துக்கு ஆளாக்கியிருந்தார்கள். அதேபோன்றுதான் ரிசாட் அமைச்சர் அவர்களும் குண்டுவெடிப்பில் மாண்டுபோனவருடைய தகப்பனாரான பிரபல வர்த்தகர் இப்றாஹிம் ஹாஜியாருடன் ஒரு சபையிலே பேசிக்கொண்டிருந்த வீடியோவை வைத்துக்கொண்டு அவரை என்னபாடு படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்தக் குண்டுவெடிப்பின் பின்னர் இப்படியான பொய்க்குற்றச்சாட்டுக்களை வைத்து எல்லா அரசியல்வாதிகளையும் இனவாதிகள் பந்தாடிக் கொண்டிருந்தவேளையில், மு.காங்கிரசின் தலைவர் ரஹுப் ஹக்கீம் அவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இவர்களுக்காக போராடிய விடயத்தை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த நேரத்தில் அவருடைய சேவையானது முஸ்லிம் சமூகத்துக்கு பாரியவொரு ஆருதலையும் கொடுத்திருந்தது என்றால் மிகையாகாது.

இருந்தாலும் ஹக்கீம் அவர்கள் இந்தவிடயத்தில் அரசியல்நோக்கத்தோடு நடந்துகொண்டாரா அல்லது சமூகத்துக்காக நடந்துகொண்டாரா என்பதை யாரும் உரசிப் பார்க்கவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அதனால் ஹக்கீம் சஹ்ரான் சம்பந்தப்பட்ட விடயங்கள் இருந்திருந்தாலும் அதனை யாரும் காட்டிக்கொடுக்கவோ, வெளியிடவோ விரும்பியிருக்கவில்லை, 2015 தேர்தல் காலங்களில் சஹ்ரான் அணியினர் மு.காங்கிரசோடு சேர்ந்துதான் பயணித்தார்கள்  என்பது ரகசயமான விடயம் ஒன்றல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதற்கான ஆதாரங்களும் இருந்திருந்தது. இந்த நிலையில் இந்த விடயங்களை எல்லாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை, அப்படி யாராவது செய்ய முயன்றிருந்தால் அவர் சமூகத்தின் துரோகியாகவே பார்க்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் குண்டுவெடிப்பின் பின்னர் நாட்டிலே நடக்கும் நிலைமைகளை நன்கு அறிந்திருந்த ஹக்கீம் அவர்களுக்கு சஹ்ரான் என்பவன் தேர்தல் காலங்களில் எம்மோடு பயணித்தவன் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் ஹக்கீம் அவர்கள் பகிரங்கமாகவே கூறியிருந்தார் இந்த சஹ்ரான் என்பவனுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்வும் கிடையாது என்றும் அறிவித்திருந்தார். இந்தக்கூற்றை இனவாதிகளும் நம்பினார்கள். நமது சமூகமும் அதனை ஆமோதித்தார்கள். அதன் காரணமாக அவர் இந்தக் குண்டுவெடிப்பை விசாரிக்கும் குழுவின் ஒரு தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த தலைமை பொறுப்பிலே இருந்துகொண்டு ஹிஸ்புல்லா உட்பட இன்னும் பலபேருடன் சேர்த்து ரிசாட் அமைச்சரையும் விசாரணை செய்திருந்தார். இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு ஆருதலான செயலாகவே தென்பட்டது.

இப்படியான நிலையில்தான் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஜனதிபதி தேர்தலிலே போட்டியிடுவதற்கு முன்னால் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களும் களத்திலே இறங்கியிருந்தார். அவருடைய நிலைப்பாடுகள் சரியா பிழையா என்பதற்கு அப்பால் அவருடைய செயல்பாடுகள் ஒன்றும் ஜனநாயகத்துக்கு பிழையான ஒன்றாக தெரியவில்லை, அவர் போட்டியிட்டாலும் மக்கள் விரும்பினால் வாக்கு போடுவார்கள் அல்லது நிராகரித்து விடுவார்கள் அது அவரது உரிமை சம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட ஹிஸ்புல்லா அவர்களை அரசியல் ரீதியாக எவ்வளவும் விமர்சக்கலாம் அதில் யாரும் குறைகள் காணவும் முடியாது. ஆனால் மு.காங். தலைவர் ஹக்கீம் அவர்கள் அண்மையில் காத்தான்குடிக்கு வந்து, அவரது ஆதரவாளர்கள் மத்தியிலே ஹிஸ்புல்லாவை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார். அதேநேரம் ஏப்ரல் 21ல் நடந்த குண்டுத்தாக்குதலின் பின் ஹிஸ்புல்லா பெட்டிப்பாம்பாக அடங்கி கொண்டது மட்டுமல்ல ஓடியும் ஒழிந்து கொண்டார் அந்த நேரம் அவரை காப்பாற்றியது நான்தான் என்று தன்னடக்கம் இன்றி பேசியிருந்தார்.

இந்தப் பேச்சானது மிகவும் வருந்ததக்கபேச்சு என்பதை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் விரும்பியிருக்கவில்லை, காரணம் ஹிஸ்புல்லா என்பவரோ அல்லது ரிசாட் என்பவரோ வேண்டுமென்றே இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்வுகளை வைத்திருக்கவில்லை, குறிப்பாக தேர்தல் காலங்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவே அந்தக்கூட்டம் செயல்பட்டது என்பதே உண்மையாக இருந்தாலும், இனவாதிகளினதும், அரசியல் எதிரிகளினதும் காழ்புணர்ச்சியின் காரணமாக அவர்களின் மேல் பழியைச் சுமத்திருந்தார்கள். அதனால்தான் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற உண்மையை ஹக்கீம் அவர்கள் தெரிந்துவைத்துக்கொண்டு, அரசியல் காரணங்களுக்காக இந்த உண்மைகளை மறைத்து ஹிஸ்புல்லா ஒரு குற்றவாளிபோன்றும், தான்தான் அவரைக் காப்பாற்றியது போன்றும் பேசிய பேச்சானது ஹக்கீமின் தலையிலே ஹக்கீமே மண்ணையள்ளி போட்டுக் கொள்வதற்கு வழி அமைத்துவிட்டது என்பதே வருத்தத்துக்குறிய செய்தியாக மாறிவிட்டது.

உண்மையில் ஹக்கீம் அவர்கள் இப்படியான காட்டிக்கொடுப்பு பேச்சுக்களை பேசியிருக்ககூடாது. காரணம் தேர்தல் காலங்களில் சஹ்ரான் என்னும் பயங்கரவாதி தனது கட்சிக்குத்தான் வேலை செய்திருந்தான் என்பதோடு அவனோடு நாம் சேர்ந்து பயணித்த வீடியோக்களும், போட்டோக்களும் இருக்கும் என்பது அவருக்கு நிச்சயமாக தெரிந்தே இருந்திருக்கவேண்டும். இப்படியான விடயங்கள் தனக்கு எதிராகவும் இருக்கும்போது, அரசியலுக்காக குழந்தப்பிள்ளை பேசுவதுபோன்று பேசினால் இந்த உண்மைகளை அறிந்து வைத்துள்ள எவரும் இதனை பொருத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மைதானே..?

இப்படியான பேச்சுக்களின் பின்தான் நீங்கள்  எப்படிப்பட்டர்வர்கள் பாருங்கள் என்று வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியாக்கியிருந்தார்கள். இன்று அதன் தாக்கம் வேறுவிதமாக அமைந்து செல்கின்றது என்பதை நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்துவருகின்றோம். இதற்கான முழுப்பொறுப்பையும் ஹக்கீமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே உண்மையாகும்.

எது எப்படியிருந்தாலும், ஹக்கீமோ, ஹஸ்புல்லாவோ, அல்லது ரிசாட்டோ இவர்கள் எவருமே இந்தக் கொலைகார சஹ்ரான் கூட்டத்தோடு எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதவர்கள் என்பதே நூறுவீத உண்மை. என்றிருக்கும்போது இவர்களை அந்த இறைவன் காப்பாற்றுவான் என்பதே எங்களின் துவாவும் பிரார்த்தனையும் ஆகும்..!

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar