BREAKING NEWS

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேசியவை...

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இதன்போது, மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ்லியின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மாலைதீவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், அங்கு அரசியல் நிலைமை ஸ்திரமாக உள்ளதாகவும் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இருதரப்பு மற்றும் பிராந்திய கூட்டுறவு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

கூட்டுறவின் ஊடாகவே போதைப்பொருள் பிரச்சினை, இளைஞர்கள் தீவிர சிந்தனையின்பால் செல்வதை முடியுமான அளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய முதலீடுகளுக்கு சீனாவிற்கு மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் இலங்கை திறந்தே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார.

இதேநேரம், பொருளாதார மேம்பாட்டிற்காக இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமானதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதியும், மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சரும் உடன்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar