BREAKING NEWS

பொதுமன்னிப்பு வழங்கக் கூடிய கைதிகளுக்கு விஷேட ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள் - பொதுபலசேனா

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகள் தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு, பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சிறைச்சாலைக் கட்டமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் அடங்கிய பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றார்.

கொழும்பிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. 

நானும் சுமார் 9 மாதகாலமாக சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கின்றேன். அங்கிருந்த காலகட்டத்தில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக்கொண்டேன். பல்வேறு சிறைக்கைதிகளுடன் பழகியதுடன், அவர்களில் பலரைப் பற்றியும் அறிந்துகொண்டேன். 

அவ்வடிப்படையில் சிறைச்சாலைக் கட்டமைப்பு மற்றும் அதன் நிர்வாகமுறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் சில பரிந்துரைகளை முன்வைக்க வேண்டிய தேவையேற்பட்டிருக்கிறது.

புதிய அரசாங்கம் சிறைச்சாலைகள் தொடர்பான தேவையற்ற நிதிச்செலவீனங்களைக் கட்டுப்படுத்தியுள்ளமை உண்மையில் சிறந்த விடயமாகும்.

எனினும் மிகமுக்கியமாக சிறைச்சாலை வைத்தியசாலை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். சிகிச்சைகள் தாமதமடைகின்ற காரணத்தினால் எமது கண்முன்னர் பல கைதிகள் மரணமடைந்திருப்பதுடன், கைதிகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதில் அதிக செலவுகள் ஏற்படுவதையும் அவதானித்திருக்கின்றோம்.

சிறைச்சாலை வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதன் ஊடாக இத்தகைய சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

அடுத்ததாக குற்றச்செயல் ஒன்றுக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதியின் தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னரும் அரச இயந்திரத்தின் குறைபாடுகளால் பலர் தொடர்ந்தும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இவை மிகமோசமான மனித உரிமை மீறலாகும். அதேபோன்று அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்போர், வேறொருவர் இழைத்த தவறுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களும் இருக்கின்றனர். 

உதாரணமாக துமிந்த சில்வா விவகாரத்தை எடுத்துக்கொண்டால் யார் பக்கம் தவறு என்பது குறித்து பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் பக்கத்திலிருந்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது உயிருடன் இருப்பவர் மாத்திரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே இத்தகைய சம்பவங்கள் குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதேபோன்று சிறையில் உள்ள கைதிகளில் உண்மையில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar