ஸஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அபுஹிந்த் என்ற இந்திய உளவாளி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே துல்லியமாக எச்சரித்தார் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது .
இந்திய புலனாய்வு பிரிவினர் மூன்று தடவை துல்லியமான தகவல்களை வழங்கியிருந்தனர் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிலோன்டுடே தெரிவித்துள்ளது . ஸஹ்ரானின் குழுவிற்குள் ஊடுருவிய அபுஹிந்த் என்ற இந்திய உளவாளியே தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்தார் என சிலோன் டுடே தெரிவித்துள்ளது .
அபுஹின்ட் தான் இந்தியாவிற்கான ஐஎஸ் அமைப்பின் தலைவர் என தெரிவித்தே ஸஹ்ரான் குழுவினருடன் தொடர்பை பேணியுள்ளார் அதன் மூலம் தெவ்ஹீத் ஜமாத் அமைப்பிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளார் என ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக சிலோன் டுடே குறிப்பிட்டுள்ளது .
2019 ஏப்பிரல் 4 , 20 21 ம் திகதிகளில் தேசிய புலனாய்வு சேவையின் இயக்குநருக்கு அபுஹிந்த் மூலமாக எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது . ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த வேளை ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி , ஸஹ்ரான் ஹாசிம் அபுஹிந்த் இந்தியாவிற்கான ஐஎஸ் அமைப்பின் பிரதிநிதி என கருதினார் என தெரிவித்துள்ளார் . அவரும் அவரது சகோதரரும் அபுஹிந்துடன் இணையம் மூலமாக தொடர்ச்சியாக தொடர்பிலிருந்ததாக ஜஹ்ரான் ஹாசிம் தெரிவித்தார் எனவும் அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார் .
Post a Comment