கோட்டாபய ராஜபக்ஷவினால் எந்தவொரு விசாரணையும் இன்றி தடைசெய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாத்துகள் பலவற்றின் தடையை நீக்கியமைக்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) ஜனாதிபதி ரணிலுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது பற்றி கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் கௌரவ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டதாவது,
பயங்கரவாதத்தில் சம்பந்தப்படாத தவ்ஹீத் அமைப்புகள் மீது போடப்பட்ட தடையை ஜனாதிபதி ரணிலின் அரசினால் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டு விட்டதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதானது முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற வார்த்தை பிரயோகம் பிழையானது என்பதை காட்டுகிறது.
ஸஹ்ரான் என்ற தீயவன் செய்த அநியாயத்துக்காக ஒட்டுமொத்த தவ்ஹீத்வாதிகள் மீதும் பழி போடப்பட்டது.
அப்போதே நாம் பகிரங்கமாக கூறினோம், சுமார் 40 வருட வரலாறு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை என்று.
ஆனாலும் கோட்டாபய அரசாங்கம் எந்தவொரு நியாயமான விசாரணையும் இன்றி அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்துக்களையும் தடை செய்தது.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு பயங்கரவாதத்துடன் சம்பந்தம் உள்ளதா என்பதை விசாரித்து அவ்வாறு இல்லையாயின் தடைகளை நீக்க வேண்டும் என பல கடிதங்களை எமது கட்சி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வந்துள்ளது.
கடந்த தேர்தல்களில் தவ்ஹீத்வாதிகள் அதிகம் ஓட்டுப்போட்ட முஸ்லிம் காங்கிரஸ், அ.இ. மக்கள் காங்கிரஸ் என்பன ரணிலை ஜனாதிபதியாக்க எந்த ஒத்துழைப்பும் வழங்காத நிலையில் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இத்தடையை நீக்கியுள்ளமைக்காக, அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறது.
Post a Comment