பாராளுமன்ற உறுப்பினராவதற்கு எவ்வாறு நாட்டின் சராசரி மனிதனுக்கு உரிமை உள்ளதோ அதே உரிமை சமயத்தலைவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுடன் தேவைப்படின் சமயத்தலைவருக்குரிய ஆடையில் அல்லாது சாதாரண உடையில் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என சட்டம் கொண்டு வரலாம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
நெத் எப். ஏம் சிங்கள வானொலி இது சம்பந்தமாக அவரை கேட்ட போதே இவ்வாறு அவர் கூறினாhர்.
அவர் தனது செவ்வியில் மேலும் கூறியதாவது,
ஒரு சமயத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராவதை தடுக்கும் பிரேரணை சமயத்தலைவர்களின் உரிமையில் கைவைப்பதாகும். இன்றைய சூழ்நிலையில் சமயத்தலைவர்கள் நாடாளுமன்றில் இருப்பது சமூகத்தின் தேவையாக உள்ளது.
நாடாளுமன்றம் என்பது மக்களுக்கு அரச நிதி மூலம் சேவை செய்வதற்கான சாதனமாகும். அந்த வகையில் தனது சமூகத்துக்கான சேவைகளை முன்னெடுக்கும் பொறுப்பும், கடமையும் சமயத்தலைவர்களுக்கே அதிகம் உண்டு. இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மக்களுக்கு சேவை செய்யாமல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையில் இறைவனுக்கு தான் பதில் சொல்ல வேண்டும் என்ற உணர்வுள்ள ஒரு சமயத்தலைவர் தனது கௌரவத்தை பாராளுமன்றத்தில் காத்துக்கொள்வதோடு அவரால் சமூகத்துக்கும் சேவையாற்ற முடியும்.;
சில சமயத்தலைவர்கள் பிழை செய்வதற்காக அனைத்து சமயத்தலைவர்களுக்கும் தடைபோட முயல்வது அநீதியானதாகும். ஆனாலும் ஒரு சமயத்தலைவர் சட்டத்தரணியானால் அவர் நீதி மன்றுள் நுழைவதாயின் கறுப்பு அங்கி அணிய வேண்டும் என்ற சட்டம் இருப்பது போல் ஒரு சமயத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினரானால் அவர் தேசிய உடை அணிந்தே பாராளுமன்றத்துள் நுழைய வேண்டும் என்று வேண்டுமாயின் சட்டம் கொண்டு வரலாம். இதனை விடுத்து சமயத்தலைவர்கள் பாராளுமன்றம் செல்வதை முழுமையாக தடை செய்வதை முஸ்லிம் சமயத்தலைவர்களின் கட்சி என்ற வகையில் உலமா கட்சி மறுக்கிறது.