முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்பந்தமாக புலனாய்வுப்பிரிவினர் தகவல் கேட்டமைக்காக அரசாங்கம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்பதுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் இதற்கான அழுத்தத்தை கொடுக்க முன்வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேட்டுள்ளார்.
அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது, நாட்டில் சந்து பொந்துகளிளெல்லாம் முளைத்துக்கொண்டிருக்கும் பௌத்த ஆலயங்கள் பற்றி கணக்கெடுக்காத நிலையில், முஸ்லிம் பள்ளிவாயல்கள் இனவாதிகளால் சேதமாக்கப்பட்டும் கல்வீச்சுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டுமிருக்கும் சூழ் நிலையில் பள்ளிவாயல்கள் பற்றி முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் சி ஐ டியினர் தகவல்கள் பெற்றுள்ளதன் மூலம் முஸ்லிம்களை அரசாங்கமே அவமதித்துள்ளதாக தெரிகிறது.
தம்புள்ள தொடர் சம்பவங்களின் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருப்பதாக சொல்லும் முஸ்லிம் எம்பீக்கள் அச்சர்வதேச சக்திகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யாரென பகிரங்கமாக தெரிந்த நிலையிலும் அவர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவுமில்லை இதற்கான அரசியல் அழுத்தங்களை கொடுக்கவுமில்லை. இத்தனைக்கும் முஸ்லிம் ஒருவரே நீதி அமைச்சராகவும் உள்ளார்.
முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும், அவர்களது முஸ்லிம் கட்சிகளும் ஏட்டுச்சுரைக்காய் கட்சிகள் போன்று இது விடயத்தில் அறிக்கைகள் விடுவதும் நேரத்துக்கொரு முரண்பட்ட பேச்சுக்களை பேசுவதுமாகவே இருக்கின்றார்களே தவிர எத்தகைய ஆக்கப+ர்வமான அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதை காண முடியவில்லை. அதே போல் நாட்டுக்காக ஐ நா வரை சென்று வந்த ஜம்இய்யத்துல் உலமாவும் “ஏதாவது” தந்தால்த்தான் அறிக்கையாவது விடுவோம் என்ற நிலையிலிருப்பது முஸ்லிம் சமுதாயத்தின் மிகப்பெரிய அவலமாகும்.
ஆகவே அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவின் இந்த நடவடிக்கையும் சர்வதேச பின்னணி என அறிக்கை விடாமல் இதற்காக அரசாங்கம் பகிரங்கமாக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன்; பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் கல்முனை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, அக்குறனை போன்ற முக்கிய நகரங்களில் ஜனநாயக ரீதியிலான சத்தியக்கிரகங்களை நடத்துவதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன் வரவேண்டும் என உலமா கட்சி கேட்டுக் கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.