ஹஜ்ஜுக்காக செல்ல விரும்புவோரிடமிருந்து பதிவுப் பணம் அறவிடுதலை நிறுத்தியமைக்காக உலமா கட்சி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது.
உலமா கட்சியின் உயர்சபைக்கூட்டம் 21.06.2012ல் கொழும்பு 10, தாருள் குர்ஆனில் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் தலைமையில் நடைபெற்ற உயர் சபைக்கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஹஜ்ஜுக்காக செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் ரூபா இருபத்தி ஐயாயிரம் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்துக்கு செலுத்தி முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டுமென நிபந்தனையிடப்பட்டனர். ஹஜ்ஜுக்குப்போகு முன்பே வங்கியில் பணத்தை செலுத்தி வட்டிக்கும் ஒத்துழைக்க வேண்டிய இத்தகைய பிழையான நடைமுறையின் விபரீதம் பற்றி நாம் சில மாதங்களுக்கு முன்பே பகிரங்கமாக அல்ஜஸீறா மூலம் தெரிவித்திருந்தோம். இஸ்லாமிய நெறிகளுக்கு மாற்றமான இத்தகைய நிபந்தனையினால் ஹஜ்ஜுக்கு செல்ல விரும்பும் பல ஹாஜிகள் மன உளைச்சலுக்குள்ளானதையும் நாம் கண்டோம்.
இத்தகைய சூழ்நிலையில் பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் மற்றும் சமய விவகார பிரதி அமைச்சர் போன்றோரும் இது விடயத்தில் கவனம் செலுத்தியமையினால் செலுத்தப்பட்ட கட்டனத்தை திருப்பி வழங்கும்படி ஜனாதிபதி பணித்துள்ளமைக்காக ஜனாதிபதிக்கு உலமா கட்சி ஹாஜிமார் சார்பில் தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதே போல் பிரதி அமைச்சர் காதரின் ஹாஜிகள் மீதான அக்கறையையும் தான் பாராட்டுவதாக முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.