முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், குர்ஆன் ஹதீதை விட்டு விட்டு மஹிந்த சிந்தனையை கட்டிப்பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் என்ற ஐ தே க தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்று குர்ஆனை எந்த வகையிலும் இழிவு படுத்தாது என்பதால் அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டிய அவசியம் இல்லை என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
பொதுவாக ஒரு முஸ்லிம் குர்ஆன் ஹதீதை விடுத்து வேறு சித்தாந்தங்களுக்கு முதன்மை வழங்குவானாயின் அவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. அந்த வகையில் குர்ஆன் ஹதீதே தமது யாப்பு என கூறிக்கொள்ளும் ஸ்ரீ. மு. கா இன்று அவற்றை ஒதக்கிவிட்டு வேறு சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது நாடறிந்த விடயம். இதனையே திரு. ரணில் விக்ரமசிங்க தமதுரையில் தெரிவித்திருந்தார். அவரது இக்கூற்று எந்த வகையிலும் குர்ஆனை இழிவு படுத்தவில்லை. மாறாக குர்ஆனுக்கு ஏற்புடையதாகவே அவரது கருத்து உள்ளது.
இஸ்லாம் பற்றிய இம்மாதிரியான விடயங்களில் உலமா சபையிடம் அல்லது உலமா கட்சியிடம் ஆலோசித்த பின் மறுப்பு கருத்துக்கள் வழங்கப்பட வேண்டும். அதனை விடுத்து மௌலவி அல்லாத முஸ்லிம்கள் குர்ஆன் ஹதீத் ஆதாரமின்றி மார்க்கத்தீர்ப்பு வழங்க முன் வருவது தவிர்க்கப்பட வேண்டும். ஆகவே ரணில் விக்ரமசிங்க அவர்களின் கூற்று சரியானது என்றும் அவர் முஸ்லிம்களி;டம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் உலமா கட்சி ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறது.