அரசாங்கத்தின் தரகராக – புறோக்கராக – கிழக்கு மாகாண தேர்தலில் தனித்து களமிறங்கியிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் பள்ளிவாயல்களை தாக்கும் இனவாதிகளுக்கெதிரான செய்தியை நாம் சொல்ல முடியுமா என்பதை முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தாம் தனித்தக்கேற்பது தனக்கு முதுகெலம்பை தந்துள்ளது என மு. கா தலைவர் ஹக்கீம் கூறியிருப்பதன் மூலம் அவருக்கு அரசியல் யதார்த்தம் இன்னமும் புரியவில்லை என்று தெரிகிறது. கிழக்கு மாகாண தேர்தலில் தனித்து கேட்பதால் முதுகெலும்பு உள்ளதென்றால் ஏனைய சப்ரகமுவ, வட மத்தி மாகாணங்களில் அரசுடன் இணைந்து வாக்கு கேட்பது முதுகெலும்பற்ற செயல் என்பதை அவரே ஏற்றுக்கொள்கின்றார். கிழக்கில் மு. கா மட்டும் தனித்து கேட்கவில்லை. அரசாங்கத்தின் பங்காளிகளான அமைச்சர் வாசுதேவ, திஸ்ஸ விதாரன, விமல் வீரவங்ச போன்றவர்களின் கட்சிகளும் தனித்து போட்டியிடத்தான் செய்கின்றன. ஆக, அரசில் உள்ள ஒரு கட்சி அரசுடன் இணைந்து போட்டியிட்டாலும் அது தனித்து போட்டியிட்டாலும் அது அரச கட்சிதான் என்பதுதான் உண்மை.
மு.கா தனித்து போட்டியிடுவதால் அரசுக்கே இலாபமாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் வெற்றிலையில் சில்லறை புரோக்கர்களை இறக்கி விட்டு இன்னொரு பக்கம் மொத்த புறோக்கர்களை மரத்தில் இறக்கி விட்டுள்ளது. இதன் மூலம் இன்னொரு முஸ்லிம் கட்சிக்கு மக்களின் வாக்குகள் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளதோடு முஸ்லிம் முதலமைச்சர் பிரச்சாரத்துக்கும் அரசாங்கம் ஆப்பு வைத்து விட்டது. கடைசியில் இந்த புறோக்கர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிள்ளையானையே மீண்டும் முதலமைச்சராக்கி அழகு பார்க்கப்போகிறார்கள் என்பதே உண்மையாகும்.
நாம் ஏனைய முஸ்லிம் கட்சிகளை விட ஸ்ரீ. மு. காவை மட்டும் அதிகமாக விமர்சிப்பதாக பலரும் குறை கூறுகின்றனர். உண்மையில் ஏனைய கட்சிகள் எந்தவித இரத்தமும் சிந்தாமல் அமைச்சுப்பதவியை மட்டும் மூலதனமாகக்கொண்டு உருவாக்கப்பட்டு வளர்ந்ததாகும். ஆனல் மு. கா முஸ்லிம்களின் இரத்தத்தால் வளர்ந்ததாகும். மறைந்த தலைவரினாலும் அவரோடிருந்த போராளிகளும் நாமும் பாரிய அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுத்த மகப்பெரிய மக்கள் இயக்கம் இன்று சுயநலவாதிகளின் ப+ மாலையாக மாறியிருப்பதால்தான் அதனை விமர்சிப்பது எமது கடமையாக நினைத்து செயற்படுகிறோம். 1989-90களில் மறைந்த தலைவரை சஊதி அரேபியாவின் ராபித்தா, நத்வா. வாமி என அனைத்துக்கும் அறிமுகம் செய்து வைத்ததோடு பல இலட்சக்கனக்கான நிதிகளை சேர்த்தனுப்பி அக்கட்சிக்காக நாம் உரமூட்டியது அக்கட்சியின் மூலம் முஸ்லிம் சமூகம் தனது உரிமைகளை வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான். இதற்க சாட்சியாக சேகு இஸ்ஸதீன். இனாமள்ளா போன்றோர் உள்ளனர்.; இப்போது அக்கட்சி என்ன நிலையில் உள்ளது என்பது மனச்சாட்சி உள்ள எவருக்கும் தெரியும்.
ஆகவே இன்றைய சிங்கள பேரினவாதத்துக்கு பலம் சேர்க்க தரகர் வேலை செய்யும் மு.காவை நிராகரித்து ஐ தே கவுக்கு வாக்களிப்பதன் மூலமே மு. கா தலைமைக்கும் அவர் ஒட்டியிருக்கும் பேரினவாதத்துக்கும் கிழக்கு முஸ்லிம்கள் சரியான செய்தியை சொன்னதாக முடியும்.