கிழக்கு தேர்தலில் நாம் விடுத்த பகிரங்க சவால்களுக்கு பதில் தராமல் மேடைகளில் ரஊப் ஹக்கீம் எம்மை விமர்சித்துத்திரிவது அவரது கையாலாகா தனத்தையே காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத்தலைவாராக இருந்த மருதூர் கணியை மிஞ்சும் அளவு உலமா கட்சித்தலைவர் அறிக்கை விடுவதாக அண்மையில் ரஊப் ஹக்கீம் சாய்ந்தமருதில் உரையாற்றும் போது கிண்டலாக கூறியுள்ளார். அத்தோடு நில்லாமல் மருதூர்க்கனியின் அறிக்கை விடுதலை ஒரு நடிகையின் மரணத்துடன் ஒப்பிட்டு கிண்டலும் அடித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக தனது பேனாவை பயன்படுத்திய ஒரு மூத்த தலைவரை அதுவும் மரணித்து விட்ட மருதமுனையின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை இவர் மேடையில் வைத்து கிண்டலடித்த போது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் இழிச்ச வாயர்களாக புதினம் பார்த்து நின்றதன் மூலம் தமது மூத்த உறு;பினர் ஒருவர் அவமானப்படுத்துவது கூட புரியாமல் இருந்துள்ளார்கள். இவற்றைக்கேடட பின்பும் மருதமுனை மக்கள் இக்கட்சியினருக்கு வாக்களிப்பர்களாயின் அவர்களும் தமது மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரை கிண்டலடிக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.
அத்தோடு நிற்காமல் மருதமுனையில் ஹக்கீம் பேசும் போது எமது தொப்பியின் நிறத்தை கிண்டலடித்துள்ளார். இவரா ஒரு முஸ்லிம் கட்சித்தலைவர்? அன்று இலங்கையில் சிவப்புத்தொப்பிக்காக போராடிய உணர்வுள்ள முஸ்லிம் தலைவர்கள் இந்த நாட்டில் இருந்தனர். இன்று அதே சிவப்பத்தொப்பியை கிண்டலடிக்கும் முஸ்லிம் தலைவர்கள்? இருப்பது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அவல நிலையை காட்டுகிறது.
ஹக்கீமின் இவ்வாறான விமர்சனங்கள் மூலம் உலமா கட்சி என்பது தற்போதைக்கு வாக்குப்பலம் இல்லாத கட்சியாக இருந்தாலும் அது வார்த்தைப்பலம் உள்ள பலமான கட்சி என்பது தெளிவாவதுடன் உலமா கட்சி பற்றிய அச்சம்; அவருக்கு அதிகரித்துள்ளது என்பதையுமே காட்டுகிறது. எம்மைப்பொறுத்த வரை அரசியல் களத்தில் மக்களை ஏமாற்றாமல் எதுவித சுய நலனும் இல்லாமல் இறைவனுக்காக என உண்மை பேசும் ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற அடையாளத்தை நாம் பெற்றுள்ளோம்.
இந்தத்தேர்தலின் போது நாம் இரண்டு சவால்களை முஸ்லிம் காங்கிரஸ் முன்பு வைத்தோம். முஸ்லிம் காங்கிரஸ் எந்தக்காலத்திலாவது முஸ்லிம்களின் உரிமைகளை முன் வைத்து அரசுடன் பேரம் பேசி இணைந்துள்ளதா? மற்றது ரஊப் ஹக்கீமினால் கிழக்கு முஸ்லிம்கள் பெற்ற ஒரு சமூக நன்மையையாவது காட்ட முடியுமா என்பது. இதற்குரிய பதிலை தராது எம்மை விமர்சிப்பதன் மூலம் அப்பாவி கிழக்கு மாகாண முஸ்லிம்களை இவர் அநியாயத்துக்கு ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.