அரசாங்கத்துடன் இணையும் போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக்கூட நிபந்தனையாக முன்வைக்காத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், சுனாமியால் இன்னமும் வீடுகள் கிடைக்காத கல்முனை மக்கள் பற்றிப்பேசுவது அவரின் அடுத்த கட்ட ஏமாற்று நடவடிக்கையாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னமும் வீடுகள் கிடைக்காத கல்முனை மக்கள் பற்றி ரஊப் ஹக்கீம் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிருந்தார். ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து கொண்டு எதிர் கட்சி உறுப்பினர் போன்று இவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதை பார்த்த போது இஅவரது அரசியல் சாணக்கியத்தின் அதல பாதாள நிலை புரிந்தது.
ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்காத கட்சியே நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கும். அரசில் அங்கம் வகிக்கும் கட்சி இதனை பேசிக்கொண்டிருக்காது செயலில் காட்டும். இவர்கள் அமச்சரவையில் இருந்து கொண்டே, வாரத்துக்கொரு முறை ஜனாதிபதி தலைமையில் கூடிக்கொண்டே இது பற்றி அங்கு பேசாமல் நாடாளுமன்றத்தில் ஒப்பாரி வைப்பதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்களா என்று கேட்கின்றோம். அல்லது அப்பாவி கல்முனை மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நடவடிக்கையா?
.
சுனாமியின் பின் ரஊப் ஹக்கீம் இரண்டு தடவைகள் அமைச்சராகி விட்டார். ஆனாலும் இது வரை கல்முனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் விமோசனம் கிடைக்கவில்லை என்றால் இவர்கள் அமைச்சர்களாக இருந்து யாருக்கு என்ன பிரயோசனம் கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. 2007ம் ஆண்டில் இந்த அரசுடன் இணைந்த போது இவர் சுனாமி மக்கள் பற்றி பேசவில்லை. பின்னர் அடத்த வருடம் கட்சி மாறினார். பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் கட்சி மாறி அரசுக்கு ஆதரவளித்தார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசை எதிர்த்து நின்றதோடு இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு வெட்கப்படுகிறோம் என கூறினார். பின்னர் வெட்கங்கெட்டு கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு முட்டுக்கொடுத்தார். தாம் தீர்மானிக்கும் சக்தி என் பெருமைப்பட்டுக்;கொண்ட இவர்கள் ஆகக்கு குறைந்தது சுனாமியால் வீடிழந்த அப்பாவி ஏழை மக்களுகக்கான வீடுகளையாவது குறிப்பிட்ட காலத்துள் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நிபந்தனை இட்டிருக்கலாம்.
சஊதி அரசினால் கட்டப்பட்ட வீடுகள் கூட துருப்பிடித்து அதில் ஷைத்தான்கள் வாழ்கின்றன. இந்த வீடகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் சக்தி நிறைவேற்று அதிகாரத்துக்கும் இருந்தும் அதனை இன்னமும் எவ்வாறு சமூக நலனுக்கு பாவிப்பது என்ற அரசியல் கூட தெரியாமல்தான் இருக்கிறார்களா? அல்லது மக்கள் பிரச்சினைகளை தீர்க்காது பிச்சைக்காரனின் புண் போல் அடுத்த தேர்தலுக்கும் இவற்றை பயன்படுத்துவதற்கான திட்டமா?
கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளிக்கும் போதாவது இவற்றை நடைதுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பதவிகளுக்காக சரணடைந்து விட்டு இப்போது தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக்கொண்டவன் போல் சுனாமி மக்கள் பற்றி பேசுவது வெட்கங்கெட்ட செயலாகும். இத்தகைய ஒருவரைத்தலைவராகக்கொண்ட கட்சிக்கு மக்கள் ஆதரவு தருவது அதைவிட வெட்கங்கெட்ட செயலாகும் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.