தியாகப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் உலகளாவிய முஸ்லிம்களுக்கு இறைவனின் அருளும், அவனது அன்பும் கிடைக்க வேண்டுமென பிராhத்திப்பதுடன் குர்ஆன் ஹதீத் ஒளியில் ஒற்றுமைப்பட்ட சமூகமாய் வாழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமெனவும் அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்துகிறது.
ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஹஜ் என்பது வருடத்தில் ஒரு தடவை வருகின்ற பெரு நிகழ்வாகும். முழு முஸ்லிம் சமூகத்தினதும் கவனத்தை அரபாவின் பக்கம் திருப்பி உலகளாவிய உம்மத்தின் ஒற்றுமையை பறை சாற்றும் சிறந்ததொரு வணக்கமாகும். இந்த வணக்கத்தின் மூலம் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த நபி இப்றாஹீம் அவர்களின் தியாக வாழ்வை நாம் உணர்வதுடன் உலகளாவிய மக்களை ஹஜ்ஜுக்கு வரும் படி மக்காவுக்கு அழைத்த முதல் முஸ்லிமாகவும் அவர் திகழ்கிறார். அதன் மூலம் முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் வரலாறு என்பது ஆயிரத்து நானூறு வருடங்கள் அல்ல அதனையும் தாண்டிய ஐயாயிரம் வருடங்களைத்தாண்டியது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்கிறோம்.
இத்தகைய உண்மையை ஹஜ் பெருநாளின் தாத்பரியம் நமக்கு தெளிவு படுத்துமாயின் அதுதான் பெருவெற்றியாகும்.
இத்தகைய தெளிவான பாதையில் இருந்து கொண்டு இந்த தியாக பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வல்ல நாயனின் அன்பு கிடைக்க பிரார்த்திக்கிறோம்.