(சட்டத்தரணி எம். எம். அபுல் கலாம்)
சில தினங்களுக்கு முன் "ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த
கவலையும் இல்லைஅவர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலேயே
எந்நேரமும் குறியாய் செயற்படுகிறார்" என்ற தலைப்பில் விக்கிலீக்ஸ் தகவலை
வைத்து வெளிவந்த செய்தியுடன் 2002ம் ஆண்டு அரசியல் நிலைமைகளை
நினைவுபடுத்தியபோது 2002ம் ஆண்டு நடந்த பின்வரும் அரசியல் நிகழ்வுகள்
விடயங்கள் அதை மேலும் உறுதிப்படுத்தின.
13/04/2002ல் புலிகளின் வன்னி தலைமையகத்தில் இந்த SLMC – LTTE
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு இரு மாதங்களுக்கு முன்பு
LTTE க்கும் UNP அரசுக்கும் இடையே நோர்வே அனுசரணையுடன் செய்யப்பட்ட (CFA)
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டமாகவே ஹக்கீம்-பிரபா ஒப்பந்தம்
செய்யப்பட்டது. UNP அரசின் முக்கிய பங்காளியாகவும் UNP ஆட்சி அமைவதற்கும்
SLMC 2002ல் பெரும் பங்காற்றியது.
CFA ஒப்பமிடப்பட்ட போது பிரதமர் ரணில் கொழும்பிலும் பிரபா வன்னியிலும்
வைத்து ஒப்பமிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஹக்கீம்-பிரபா ஒப்பந்தம்
புலிகளின் வன்னி தலைமையகத்தில் இடம்பெற மு.கா தலைமைத்துவம் உடன்பட்டது.
CFA முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் என்று மு.கா தலைமை
பிரகடனப்படுத்தியது. ஆனால் மு.கா.வை பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமலேயே
இந்த ஒப்பந்தம் பிரதமர் ரணிலால் முன்னெடுக்கபட்டது. கடைசி நேரத்தில்
சம்பிரதாயத்துகாக காட்டப்பட்டது. வட கிழக்கு முஸ்லிம்களின் உரிமை
பாதுக்காப்பு பற்றி எதுவும் அதில் இருக்கவில்லை. வட கிழக்கு முஸ்லிம்
பிரதேசங்கள் புலிகளின் ஆளுகைக்கு உட்படு த்தப்பட்டன. CFA முஸ்லிம்களின்
முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம் என்று தேசிய ஐக்கிய முன்னணி (NUA)
பிரகடனப்படுத்தியது.
ரணிலும் நோர்வேயும் தமது காலை வாரி விட்டதை SLMC அப்போதுதான் உணர்ந்தது.
முடிந்தால் புலிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரணிலும்
நோர்வேயும் SLMC க்கு ஆலோசனை வழங்கினர். இந்தப் பின்னணியில் தான் SLMC
-LTTE ஒப்பந்தம் நோர்வே அனுசரணையுடன்ஹக்கீமின் பிறந்த நாளான ஏப்ரல் 13ல்
செய்யப்பட்டது.
அன்று புலிகளுடன் ஒப்பந்தம் செய்தவர்களில் மூவர் இன்று அமைச்சரவையில் உள்ளனர்.
மு.கா. தலைமைத்துவம் புரிந்த இந்த வரலாற்றுத் தவறால் முஸ்லிம்கள் அனுபவித்த இழப்புகளுக்கு வரலாறு சாட்சி.
மு.கா தலைமை அரசியல் தூர திருஷ்டி இல்லாமல் பிழையான பாதையில் பயணித்துத்
தடம் புரண்ட நாளாகவே இந்த நாள் முஸ்லிம் அரசியல் சரித்திரத்தில் நினைவு
கூரப்படவேண்டும்.
ஹக்கீம்-பிரபா ஒப்பந்தம் வடக்கு முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்டதை
அங்கீகரிக்கவில்லை. தாமாக வெளியேறிய முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டது.
மு.கா.வே முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதி என்று புலிகள் அங்கீகாரம்
வழங்கினர். மு.கா. வுக்கு முஸ்லிம்கள் வழங்கிய அங்கீகாரத்தை விடப்
புலிகளின் அங்கீகாரம் அப்போது தேவையாய் இருந்தது போலும்.
தெற்கே சிங்கள மக்கள், முஸ்லிம்கள் மீது வைத்திருந்த நீண்டகால நல்லெண்ணத்தை ஹக்கீம்-பிரபா ஒப்பந்தம் கேள்விக்குறியாக்கியது.
