இனவாதத்தை தூண்டும் அல்லது மத விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எவருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என 15 முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உறுதியளித்தார்.
இலங்கையில் கடமை புரியும் 15 இஸ்லாமிய நாடுகளின் ராஜதந்திரிகளை ஜனாதிபதி இன்று அலரி மாளிகையில் சந்தித்து உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
இனவாதத்தைத் தூண்டுவது அல்லது மத விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தான் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
பங்களாதேஷ், ஈரான், ஈராக், எகிப்து, இந்தோனேஷியா, குவைத், மலேஷியா, மாலத்தீவு, நைஜீரியா, பாக்கிஸ்தான், பாலஸ்தீனம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ரவுப் ஹக்கீம், அநுர பிரியதர்ஸன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். (எம்.ரி.-977)
