BREAKING NEWS

வடமாகாண தேர்தலை நடத்த விரும்பாத அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கா


முஸ்லிம்களை மீளக்குடியேற்றும் வரை வட மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது முஸ்லிம்கள் மீதான அன்பினால் அல்ல, மாறாக வடமாகாண தேர்தலை நடத்த விரும்பாத அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்

2004ம் ஆண்டுக்குப்பின் வட மாகாண முஸ்லிம்களின் பெயர்கள் வேறு மாவட்டங்களில் வாழ்வதாக குறிப்பிட்டு வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக முஸ்லிம்கள் மீள் குடியேறும் வரை தேர்தலை நடத்தக்சூடாது என இக்கட்சி கூறியுள்ளது. அப்படியாயின் கடந்த 2010 ஜனாதிபதி தேர்தல், 2010 பாராளுமன்ற தேர்தல்கள் நடத்ப்பட்ட போது ஏன் அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கவில்லை?

    அத்துடன் வடமாகாணத்தில் பல உள்ளுராட்சி தேர்தல்களும் நடாத்தப்பட்டு அதில் இக்கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைகளிலெல்லாம் தேர்தலுக்கு ஒத்துழைத்து அதில் போட்டியிட்டு விட்டு இப்போது மட்டும் முஸ்லிம்கள் மீள்குடியேறினால்தான் தேர்தல் என கூறுவது அ. இ. மு. காவின் சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும்.
உண்மையில் வட மாகாண சபை தேர்தலுக்கு முகம் கொடுக்க அரசு அஞ்சுகிறது. அதே போல் அரசில் அங்கம் வகிக்கும் அ. இ. முஸ்லிம் காங்கிரசுக்கும் இந்த அச்சம் உள்ளது. அண்மைக்காலமாக அரச ஆதரவு அமைப்புக்களால் முஸ்லிம்கள் தமது பல உரிமைகளை இழந்து தன் மானத்தையும் இழந்துள்ள சூழ் நிலையில் அரச கட்சிக்கோ அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட அச்சத்தாலும், வட மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது என்ற அரசின் விருப்பத்தை நிறைவேற்றவுமே இவர்கள் தமது செஞ்சோற்றுக்கடனுக்காக இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அ. இ. மு. கா அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாகும். அப்படியிருந்தும்; யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகியும் முஸ்லிம்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லையாயின் இந்தக்கட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு இது வரை என்ன செய்தது என்ற கேள்வி எழுகிறது? மீள் குடியேற்றத்துக்கு தமிழ் தரப்பு தடை என பழி போட்டால் வடக்கின் ஆட்சி யார் கையில் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. தமது வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்ட ஒரு சமூகத்தை ஐந்து வருடங்களாகியும் மீள் குடியேற்ற வக்கில்லை என்றால் அது அரசினதும் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளினதும் கையாலாகா தனம் என்பதா அல்லது வேண்டுமென்றே வடக்கு முஸலிம்களை பகடைக்காய்களாக அரசாங்கம் பாவிக்கிறது என்பதா என்று கேட்கின்றோம் என முபாறக் மௌலவி கூறியுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar