முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்து வரும் பௌத்த பயங்கரவாதிகளையும், இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய லயோலா கல்லூரி எதிரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு, இன்று திங்கட்கிழமை (01.04.2013) மாலை 4.00 மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளது.
மேலும் அவர்கள் அங்கு தெரிவித்ததாவது, இலங்கையில் ஆளும் அரசாங்கம் தமிழர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு, ஹலால் முத்திரை நீக்குதல், முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கம் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல், பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லிம்களை அச்சுறுத்தல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பெபிலியானவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஃபெஷன் பக் (Fashio Bug) நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து பௌத்த பிக்குகளும், பாசிஸ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
இம்முற்றுகைப் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் ஷேக் முஹம்மத் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு இலங்கை அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், செயல் விரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வின்போது 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.