முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்களை கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொண்டு அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டுமிருக்கும் கட்சியின் நகர சபை உறுப்பினராக இருந்து கொண்டு தமது கட்சித்தலைமையை கண்டிக்காமல் எதிர்க்கட்சித் தலைவரை கண்டிக்கும் ரம்ழானின் செயல் அப்பட்டமான சுயநலமும், முஸ்லிம்களை ஏமாற்றுவதுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் எனும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்ததுதான் அரசாங்கம் என்பதை புரியாத அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் மத்தியல் மட்டும் இருப்பது கவலைக்குரியதாகும். ஒரு காலத்தில் ஐ தே க மற்றும் சுதந்திர கட்சிகளின் ஆட்சிகளின் போது அக்கட்சிகள் முஸ்லிம்களுக்கு தவறு செய்தால் அக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களையும் மக்கள் அரசாங்கமாகவே பார்த்து அவர்களை விமர்சிப்பார்கள். இவ்வாறுதான் அன்று முஸ்லிம் காங்கிரஸ், கல்முனை அமைச்சர் மன்சூர், சம்மாந்துறை மஜீத் போன்றவர்களுக்கெதிராக குரல் எழுப்பி அவர்களுக்கெதிராக மக்களை திரட்டியது.
இன்று; கட்சி ரீதியாக அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு முஸ்லிம் மக்களின் தன்மானத்துக்கெதிராக முன்னெப்பொழுதும் நடக்காத காரியங்களை கூட இருந்து கொண்டே பார்த்துக’கொண்டிருக்கும் தமது கட்சி அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் அரசாங்கத்தின் அங்கமாக கருதி கண்டிக்காமல் விடுவது பச்சையான சுயநலமாகும்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு ஐ தே க தலைவர் ரணில் விக்ரமசிங்க சில பொழுதுகளில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். ஆனால் ரமழானின் தலைவர்கள் மௌனமாக இருந்தது மட்டுமல்ல ரணிலக்கு ஆதரவு கூட கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அவர்களும் அசலில் ஐ தே க உறுப்பினர்கள்தான். ஐ தே கவுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறப்பினர் ஒருவர் தவிர வேறு இல்லை என்ற போதிலும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை என்னிடம் தெரிவியுங்கள் என தைரியமாக அதன் தலைவர் கூறுகிறார். ஆனால் ரம்ழானின் தலைவர்களோ முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளே இல்லை என பாராமன்றத்தில் மௌனமாக இருக்கிறார்கள். இத்தகையவர்கள் கிழக்குக்கு வரும் போது அவர்களுக்கு மாலையிட்டு வரவேற்கும் ரம்ழான் போன்ற வெட்கங்கெட்டவர்களும் இந்த சமூகத்தில் இருப்பதுதான் மிகப்பெரிய கேவலாமாகும்.
இன்ற முஸ்லிம்களுக்கெதிராக பாத யாத்திரைகள் அரசின் உதவியுடன் நடக்கின்றன. இவற்றுக்கெதிராக முஸ்லிம் காங்கிரசின் அமைச்சர்கள் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து சிங்களவர்கள் அதிகம் இல்லாத மட்டக்களப்பிலாவது ஒரு பாத யாத்திரை செல்வதற்கு மட்டக்களப்பு நகர சபை உறுப்பினரான ரம்ழானால் எற்பாடு செய்ய முடியுமா என நாம் அவரிடம் சவால் விடுக்கிறோம். அதற்குக்கூட முடியாமல் அரசாங்க பங்காளிக்கட்சியின் நகர சபை உறுப்பினராக இருப்பது வெட்கக்கேடானதாகும்.
முஸ்லிம் சமூகத்துக்கெதிரான நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டாம் என நாம்; சொல்லவில்லை. மாறாக அவ்வாறு கண்டிக்கும் போது வெட்கங்கெட்ட தமது தலைமைகளையும் சேர்த்து கண்டிப்பதுதான் உண்மையான, நியாயமான கண்டனமாகும் என்றே சொல்கிறோம். இதனை விடுத்து அக்கிரமத்துக்கு துணைபோகும் தமது தலைமைகளை விட்டு விட்டு வெறுமனே அரசாங்கம், அரசாங்கம் என்றும் ஐ தே க என்றும் புலம்புவதை நாம் கண்டிக்கிறோம். இவ்வாறு ரம்ழானை போன்றவர்கள் வெளிப்படையாக கண்டிக்காமல் விடுவது தமது பதவிகள் பறிபோய்விடும் என்ற அச்சம் தவிர வேறு இல்லை. இத்தகைய சுயநலவாதிகளால்தான் சமூகம் ஆபத்துக்களை எதிர் நோக்குகிறது.