இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சில பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கேதார்நாத், பத்ரிநாத், உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் கால் நடையாக செல்லும் பக்தர்கள் மலைகளிலும், வனப்பகுதிகளிலும் கிடைக்கும் இடங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்களும் வழிப்பறி கொள்ளையர்களும் பக்தர்களிடம் உள்ள பணம் நகைகளை கொள்ளையடித்துச் செல்கின்றனர். கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள கோரிகுண்ட் பகுதியில் மட்டும் ரூபா 17 லட்சம்; (இந்தியா ரூபா ) மதிப்புள்ள நகை, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் கோரிகுண்ட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு பெண்ணும், அவரது மகளும் பலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்தில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த பெண் யாத்திரீகர் ஒருவர் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.