BREAKING NEWS

தெரிவுக்குழுவில் இடம் பெறுவதற்காக ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெட்கமின்றி அரசிடம் கெஞ்சுகிறது


தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாத பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டுமாயின் அத்தகையதோர் தெரிவுக்குழுவில் இடம் பெறுவதற்காக ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெட்கமின்றி அரசிடம் கெஞ்சுகிறது
என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.

 முஸ்லிம் மக்கள் கட்சியின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் உதவியுடன் ஹலால் ஒழிக்கப்பட்டு பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு முஸ்லிம் பெண்களின் அபாயாவும் அசிங்கப்படுத்தப்பட்டு முஸ்லிம் சமூகம் தன்மானம் இழந்து நிர்வாணமாக நிற்கும் இன்றைய நிலையில் ஹக்கீமும் ஹரீசும் கல்முனை மக்களுக்கு கல்முனை வெளிச்சம் என உப்புச்சப்பில்லாத பழைய புரியாணியை கொண்டு வந்து ஏமாற்றியுள்ளார்கள். பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிரான அனைத்து அநியாயங்களுக்கும் வாய் மூடி மௌனியாய் ஆதரவளித்து விட்டு கல்முனை வந்ததும் பயில்வான் லேகியம் சாப்பிட்டவர் போன்று ரஊப் ஹக்கீம் வீரம் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனது கோழைத்தனத்தை உலகறியச்செய்துள்ளார்.

18வது திருத்த சட்டத்துக்கு தாம் ஆதரவளித்தது மடத்தனம் என கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூறியவர் இப்போது அரசாங்கம் தம்மை பழி வாங்கி விட்டதாக சொல்லியுள்ளார். உண்மையில் இவர்களது தரகர் வேலைக்கு அரசாங்கம் பல அமைச்சு பதவிகளையும், வேறு கொடுப்பனவுகளையும் வழங்கியள்ளதால்தான் மக்களுக்கு நிரந்தரமாக பயன்படும் எதையும் அரசு கொடுக்கவில்லை. இவர்கள் அரசாங்கத்துடன் இணையும் போது மக்கள் பிரச்சினைகளை நிபந்தனையாக்காமல் தமது பதவிகளை மட்டுமே முன்னிறுத்தி விட்டு இப்போது கல்முனைக்கு வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு போயுள்ளார். எமது மக்களும் வழமை போல் புரியாமல் மாலையிட்டு அனுப்பியுள்ளனர். கிழக்கு மக்கள் தமது சுயமான சிந்தனைகளை தட்டிவிடாமல் இருக்கும் காலமெல்லாம் தென்னிலங்கை ஏமாற்றுத்தலைமையின் இத்தகைய பயில்வான் பேச்சுக்களை கேட்க வேண்டியதுதான் தலைவிதி.

13வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என முன்னர் வீறாப்பு பேசிய முஸ்லிம் காங்கிரஸ்; அதனை திருத்துவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என தமிழ் கூட்டமைப்பும் பிரதான எதிர் கட்சிகளும் தெரிவித்துள்ள நிலையில் சோரம் போன அதாவுள்ளாவும், ரிசாதும் அந்த குழுவில் இருக்கும் போது ஹக்கீமும் அந்தக்குழுவில் இடம் பெற துடிப்பது ஏன்? இதனை பயன்படுத்தி சில சுயநலன்கனை பின்கதவால் பெற்றுக்கொண்டு 13வது திருத்தத்துக்கு தமது ஆதரவை வழங்குவதற்கா என கேட்கிறோம். அதன் பின் அடுத்த கல்முனை கூட்டத்தில் 13வது திருத்தத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு தாம் ஆதரவளித்தது மடத்தனம் என கூறுவார். மக்களும் மாலை போட்டு கை தட்டுவார்கள். கடைசியில் தலைவருக்கும் அவரது வால்களுக்கும் எல்லாம் தொடர்ந்து கிடைக்கும், மக்கள் எதுவும் கிடைக்காமல் சந்திக்கு சந்தி நின்று வழமை போல் புலம்பித்திரிவார்கள்.

எம்மை பொறுத்த வரை 13ல் கை வைப்பதை அனுமதிக்க முடியாது. ஏனென்றால் சிங்கள தமிழ் பேரினவாதத்தின் முன்பு முஸ்லிம்களும் நிபந்தனையிடும் ஒரு நல்ல சரத்தாகவே வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் உள்ளது. இதனை நீக்கி விட்டால் எத்தரப்புடனும் எந்த வித அரசியல் நிபந்தனையையும் முன் வைக்க முடியாத அடிமைச்சமூகமாக கிழக்கு முஸ்லிம்கள் தொடர்ந்தும் இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar