ஆசியாவின் இன அழிப்பு நாடாக இலங்கை மாறியுள்ளது. மனித உரிமை மீறும் நாடுகளில் இலங்கையும் முக்கிய நாடாக உள்ளதென அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் விஜயத்தின் பின்னரே இலங்கையில் போதைப்பொருட்கள் பரவுகின்றதெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்ட கருத்து முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவிக்கையில்,
ஆசியாவின் மிகவும் மோசமான நாடாகவும், ஆசியாவில் இன அழிப்பினை மேற்கொள்ளும் நாடாகவும் இலங்கையே காணப்படுகின்றது. இலங்கையில் வட மாகாணத்தில் மண்ணைத் தோண்டினால் மனித எலும்புகளும், மனித எச்சங்களுமே உள்ளன. இவ்வாறான மிக மோசமான இன அழிப்பினை இலங்கை இராணுவமும், அரசாங்கமும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது செய்துள்ளன.
மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் இன்று அனைத்து நாடுகளும் இலங்கையினையே முன்னிலைப்படுத்துகின்றன. அமைதியான, இயற்கை அழகும், உல்லாசத்துறை வளர்ச்சியும் மேலோங்கி யிருந்த இலங்கை இன்று சிறுவர் மற்றும் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும், கொலை, கொள்ளை போதைப் பொருள் வர்த்தகத்தில் வளர்ச்சி கண்ட நாடாக மாற்றப்பட்டுவிட்டது. இவை இறுதி சில ஆண்டுகளிலேயே இடம்பெற்றுள்ளது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான இலங்கை மிகவும் மோசமான கலாசாரச் சீரழிவான நாடாகவும் இலங்கையின் மிகவும் மோசமான அரசாங்கமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமும் மாறியுள்ளது.
மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் பின்னர் இவை அனைத்திற்குமான நிரந்தரத் தீர்வினையே இலங்கையின் அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.