விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நுகர்வுக்குப் பொருத்தமில்லாத காலாவதியான ஒரு இலட்சம் கிலோ கிராம் சீனியை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
மோதரை பஞ்யானந்த மாவத்தையிலுள்ள உணவு தயாரிக்கும் நிலையமொன்றிலிருந்தே நேற்றுக் காலை இந்த சீனி கைப்பற்றப் பட்டுள்ளது. இவற்றின் மொத்தப் பெறுமதி 11 மில்லியன் ரூபாவாகுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.
விசேட பொலிஸ் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமையவே குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காலாவதியான இந்த சீனி புதிய உற்பத்தி மற்றும் காலாவதி திகதி குறிப்பிடப்பட்டு மீண்டும் பக்கற் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிலையத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுபோன்ற உணவுப் பண்டங்களை சேமித்து வைக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிலையங்கள் தொடர்ந்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிகார சபையின் தலைவர் கூறினார்.