ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்களுடன் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்படவில்லை என்பதால் அந்த பிரச்சினையில் வெறுமனே தலையிடும் அவசியம் முஸ்லிம் காங்கிரஸூக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
“அரசாங்கம் போர்க் குற்றச்சாட்டுக்களை நிகராகரிக்குமாயின் அதனை ஒப்புவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
தவறு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் தான் தவறிழைக்கவில்லை என்பதை ஒப்புவித்து காட்டுவது போல், போர்க்குற்றம் தொடர்பில் அரசாங்கம், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறு நிரூபித்தால், இரண்டு தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.