மதங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதும், சமயங்களின் சுதந் திரங்களைப் பெற்றுக்கொடுப்பதும் எமது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
கிராந்துரு கோட்டை மகாவலி பிரதேச பி, சீ வலயத்தில் வாழும் 5,500 பேருக்கு காணி உறுதி வழங்கும் வைபவம் மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி தனதுரையில் மேலும் கூறியதாவது; இப்போது இல்லாத பிரச்சினைகளை புதிது புதிதாக உருவாக்கு கின்றனர். நல்லிணக்கம் பற்றிக் கூறுகின்றனர். மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் அதை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். அரசியல் அமைப்பில் கூறப்பட்டவாறு எந்தவொரு பிரஜைக்கும் எந்த இடத்திலும் வாழும் உரிமை உண்டு. அதேபோன்று தமது மொழியைப் பேசும் உரிமை உண்டு, எதையும் பின் பற்றும் சுதந் திரமும் உண்டு. அத்துடன் புத்த மதத்தை அரச அனுசரணை யோடு பாது காக்க வேண்டும் என்று அதே அரசியல் யாப்பில் கூறப் பட்டுள்ளது. அப்போது உருவாக்கப்பட்ட அதே அரசியலமைப்புத்தான் இப்போதும் பின்பற்றப்படுகின்றது. எனவே இது தொடர்பில் எவரும் கலவரப்படத் தேவையில்லை.
எமது அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கேலி பண்ணுவதுதான் எதிர்க் கட்சிகளின் தொழிலாக மாறிவிட்டது. நாங்கள் மக்கள் விமோசனத்தையும், நாட்டின் சுபீட்சத்தையும் கருதிச் செயலாற்றுகின்றோம்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நீச்சல் தடாகமாகவும், மத்தளை விமான நிலையத்தை நூதனசாலையாக மாற்றுவதாகவும் எதிர்க்கட்சி கூறிவருகின்றது. எதிர்க்கட்சியின் கதைகளை மக்கள் நம்பப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தமிழில் உரையாற்றிய போது நீங்கள் நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த காணி உறுதி உங்கள் கைகளுக்குக் கிடைக்கின்றது. அதைக் கொண்டு உங்களை முன்னேற்றுங்கள் என்றார்.
ஜனாதிபதியிடம் ஏற்றுமதிக்கென செய்கை பண்ணப்பட்ட விதைநெல் பக்கெட்டுக்கள் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி கிராந்துருக் கோட்டை மகாவித்தியாலயத்தில் 64 கணனி மற்றும் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய மஹிந்தோதய ஆய்வு கூடம் ஒன்றையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மைத்திரிபால சிரிசேன, பந்துல குணவர்த்தன, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் உட்பட பல பிரதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.