BREAKING NEWS

முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பின் பொய் பிரசாரத்திற்கு முஸ்லிம் புத்திஜீவிகள் கண்டனம்

எதிர்க்கட்சிகளின் வளர்ச்சிக்காக முஸ்லிம் சமூகத்தை சிக்கலுக்குள் தள்ளிவிட சிலர் முயற்சி


சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதில்அரசியல் ஆதாயம் தேடும் தனிப்பட்ட சிலர்
நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறு. சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதன் மூலமாக அரசியல் பிரசாரம் செய்ய
எதிர்க்கட்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சிகளில் முஸ்லிம் அமைப்புக்கள் சிலவும், முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு எனக் கூறிவரும் அமைப்பு ஒன்றும் ஈடுபட்டுவருவதாக முஸ்லிம் புத்திஜீவிகளும். கல்விமான்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமது தனிப்பட்ட, தாம் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் தாம் சார்ந்த எதிரணிக் கட்சிகளினதும் வளர்ச்சிக்காக நடக்கும் சிறு சம்பவங்களை பெரிதாக மிகைப்படுத்தி ஊடகப் பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் புத்திஜீவிகள் கடுமையாகக் குற்றம் சாட்டி யுள்ளனர். அத்துடன் முஸ்லிம் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் இந்த முஸ்லிம் அமைப் புக்கள் மற்றும் அந்த அமைப்புக்களின் தலைமைகள் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளாகவும், ஆதரவாளர்களாகவும்., அங்கத்தவர்களாகவும் இருந்து வருவதால் இவர்களது செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் ஒரேயொரு கொள்கையே காணப்படுகிறது.
இதனால் அவர்கள் தமது சமூகத்தை மறந்து செயற்படுகின்றனர் எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உண்மையாக சமூகத்திற்காகக் குரல்கொடுக்கும் பொது அமைப்புக்களில் அங்கம் வகிப்போர் கட்சி சார்பில்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே காணப்படும் பிரதானமான பலரும் எதிரணியைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
இதன் மூலம் இவர்கள் மீதான நம்பகத்தன்மை இழக்கப்பட்டுள்ளதாகவும் கல்விமான்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத் தரப்பிலுள்ள அமைச்சர்களான ரிசாத் பதியுத்தீன். ஏ. எச். எம். பெளஸி, ஏ, ஆர். எம். ஏ. காதர் ஆகியோர் நிதானமாகவும், பக்குவமாகவும் அதேவேளை எவ்விதமான விட்டுக் கொடுப்புமில்லாது சமூகத்திற்கு எதிரான சவால்களைக் கையாண்டு வருகையில் முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு எனக் கூறிக்கொள்ளும் சில சக்திகள் தமது பிரசாரத்திற்காகவும், தாம் சார்ந்த எதிர்க்கட்சிகளின் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுதலுக்காகவும் பிரச்சினைகளை ஊதிப் பெருப்பிப்பதாகவும் புத்திஜீவிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். உணர்ச்சிவசப்படாது. நிலைமையை அமைதியாகவும், சமாதானமாகவும் பேசித் தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள புத்திஜீவிகள், இத்தகைய அமைப்புகளின் போலிப் பிரசாரங்களைச் செவிமடுக்க வேண்டாமெனப் பொது மக்களிடம் கேட்டுள்ளனர். இவர்கள் முற்றுமுழுதாக தமதும், தாம் சார்ந்த அமைப்புக்களினதும், எதிரணியினதும், பிரசாரத்திலேயே குறிப்பாக இருப்பதாகவும் அதற்காக சமூகத்தை சிக்கலுக்குள் தள்ளிவிட்டு அதில் குளிர்காய முயல்வதாகவும் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அவர்களுடனும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடனும் பேசியே தீர்வு காணப்பட வேண்டும். எனவே எரியாத வீட்டிற்கு எண்ணை ஊற்றி பற்றவைத்து அதில் உங்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டாமெனவும் புத்திஜீவிகள் கேட்டுள்ளனர். உண்மையில் பல முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு என்ற ஒன்று நாட்டில் இருக்குமானால் அது சமூகத்தின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர். Thinakaran

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar