கல்முனைக்குடி சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்; முதல்வர் களத்திற்கு விஜயம்!
கடந்த சில மாதங்களாக தடைப்பட்டிருந்த கல்முனைக்குடி சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் வலியுறுத்தியதன் பேரில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் இன்று (10-05-2014) களத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வீதியின் புனர்நிர்மாணப் பணிகள் கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக முறையிட்டு அவ்வீதியில் வசிக்கும் 128 குடும்பத்தினர் கையெழுத்திட்டு மாநகர முதல்வருக்கு மகஜர் ஒன்றை கையத்திருன்தனர்.
கல்முனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இந்த முறைப்பாட்டு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இப்பிரச்சினைக்கு இனியும் தீர்வு கிடைக்கா விட்டால் தாம் பாரிய ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவிருப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த முறைப்பாடு குறித்து ஆராய்வதற்காக கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் இன்று அவ்வீதிக்கு நேரடி விஜயம் செய்திருந்தார்.
அதேவேளை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவ்வீதியின் புனரமைப்பு வேலைகளை இன்று மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது.
இதன்போது ஒப்பந்தக்காரர் மற்றும் பொறியியலாளர் ஆகியோருடன் முதல்வர் கலந்துரையாடியதுடன் இந்த வீதி அபிவிருத்தி பணிகளை துரிதமாகவும் நேர்த்தியாகவும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.