முற்கட்டமாக ரூ.200 மில்லியன் ஒதுக்கீடு
* கட்டுமானப் பணிகள் இராணுவத்திடம்
* நீர், மின்சாரத்தை இலவசமாக வழங்குமாறு அமைச்சர் பணிப்பு
அளுத்கமை, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற வன் செயல் சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகளை மீள் புனரமைக்கும் பணிகள் இன்று 27ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அரசாங்கம் இப்பணிக்காக 200 மில்லி யன் ரூபாவை செலவிடுகிறது. வீடுகள், வர்த்தக நிலையங்களையும் இராணு வத்தினரே புனரமைக்கவுள்ளனர். ஒரு மாத காலத்திற்குள் இந்த மீள் புனரமைப்புப் பணி பூர்த்தி செய்யப்படும். இராணுவத்திடம் 150 மில்லியன் ரூபாவும், களுத்துறை மாவட்டச் செயலாளருக்கு 50 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தினால் ஒதுக்கப் பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நேற்று 26ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்களான குணரத்ன வீரக்கோன், ரோஹித அபேகுணவர்தன உட்பட இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட செயலாளர் யு.டி.சந்தன ஜயலால் உட்பட அரசாங்க உயரதிகாரிகள் பலரும் பங்குபற்றினர். பேருவளை, அளுத்கமை, தர்கா நகர் ஆகிய பகுதிகளில் சேதமுற்ற , தீவைத்து எரிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங் களின் முழு விபரங்களும் திரட்டப்பட்டு ள்ளதோடு, அழிவுற்ற வீடுகள், வர்த்தக நிலையங்கள் மூன்று பிரிவுகளாக்கப்பட்டு அவை மீள் புனரமைக்கப்படும். அழிவுற்ற வீடுகளின், வர்த்தக நிலையங்களின் கழிவுப் பொருட்கள் முதலில் அகற்றப்படும். அதன் பின்னர் மீள் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகும். பேருவளை நகர சபை, பிரசேத சபையின் பங்களிப்பும் கழிவுப் பொருட்களை அவ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கு பெற்றுக்கொள்ள ப்படும் என்றும் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பேருவளை, அளுத்கமை மற்றும் தர்கா நகர் பகுதியில் அழிவுற்ற வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் மீள் புனரமைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய அவர் இப் புனரமைப்பு பணிக்காக 200 மில்லியன் ரூபாவை உடனடியாக ஒதுக்கியுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தெரிவித்தார்.
வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் மீள் புனரமைப்பதற்கு நீர், மின்சார வசதிகள் அவசியம்.
இவற்றுக்கான வசதிகளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும், இலங்கை மின்சார சபையும் ஒரு மாத காலத்திற்கு கட்டணமின்றி வழங்க வேண்டும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கேட்டுக்கொண்டார்.
அழிவுற்ற வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் இராணுவத்தினர் மீள் புனரமைப்பதால் அவை நூறு சதவீதம் வெற்றியளிக்கும் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் நம்பிக்கை தெரிவித்தார்.
பெந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் சேதமாக்கப்பட்ட 19 வீடுகளையும் புனரமைக்க வேண்டியுள்ளது. இராணுவத்தின் பட்டியலில் இவற்றையும் உள்ளெடுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் உபய மெதவல, பேருவளை, அளுத்கமை பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமர சிறி சேனாரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் சில்வா, பேருவளை பிரதேச செயலாளர் ஜானக ஸ்ரீ சந்ரகுப்த, மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்ஜீவ, நகர சபை உப தலைவர் ஸஜித் தேவப்பிரிய, பிரசேத சபை உப தலைவர் நெவில் ரன்சித் உட்பட பலரும் இங்கு பேசினர்.