முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத- குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் முடிவு செய்துள்ளன.
அத்துடன் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்று தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மண்டலங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது.
கடந்த 14ஆம் திகதியில் அளுத்கம தர்க்காநகர்- பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையக உறுப்பினர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.