BREAKING NEWS

சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற நிலையில் இன்று முஸ்லிம் காங்கிரஸ்

இந்த அரசாங்கம் இனவாத, அராஜக அரசு என பகிரங்கமாக சொல்லிக்கொண்டே அத்தகைய அராஜக அரசின் பங்காளிகளாக முஸ்லிம் காங்கிரசும் இருப்பது பாரிய முரண்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் ஈபிஆர்எல்எப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹசனலி, எதிர் காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு இனங்களும் தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தக்கருத்து உண்மையில் அவரது உள்ளத்திலிருந்து வந்ததா அல்லது போக்கிடமில்லாததால் ஏற்பட்ட ஞானமா என்பது தெரியவில்லை. ஆனாலும் சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற பரிதாப நிலையில் இன்று முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது என்பது வெளிப்படை. ஆன போதும்  சட்டி அகோரமாக சுட்டும் கைவிடாமல் இருப்பது என்பது முஸ்லிம் காங்கிரசுக்கே உரித்தான அடிப்படை சுயநலமாகும்.

     கடந்த கால தமிழர் விடுதலை போராட்ட அரசியலில் தமிழரும் முஸ்லிம்களும் இணைந்தே செயற்பட்டனர். ஆனாலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பேராசையாலும், சில தமிழ் அரசியல்வாதிகளின் பிற்போக்கான சிந்தனைகள் காரணமாகவும் இவ்வுறவில் இலேசான கீறல் விழுந்தது. பின்னர் ஆயுத இயக்கங்களின் கண்மூடித்தனமான போக்கினால் இக்கீறல்கள் பெரு வெடிப்பாக மாறின. இதன் காரணமாக இரு சமூகங்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் பாரிய இழப்பை சந்தித்ததுடன் இலங்கை அரசுக்கு துணை போகவேண்டிய நிர்ப்பந்தமும் அதற்கு ஏற்பட்டது.
     ஆயுத போராட்டம் முடிவுற்று மீண்டும் ஜனநாயக ரீதியிலான இன்றைய போராட்டத்தின் போது முஸ்லிம்களும், தமிழர்களும் இரு இனங்களினதும் ஒற்றுமை பற்றி சிந்திப்பது தவிர்க்க முடியாததாகும். முஸ்லிம்கள் இசுலாமிய தமிழர்கள் என்ற சொல் விலக்கப்பட்டு இன்று முஸ்லிம்கள் தனியான இனம் என்றும் அவர்களையும் இணைத்து தமிழ் பேசும் மக்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற பெருங்கட்சிகள் ஏற்றிருப்பது தமிழ் முஸ்லிம் உறவுக்கு கட்டியம் கூறுகின்றன.
   
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்பின் இத்தகைய உறவு வலுப்பெற சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. உலமா கட்சியின் கோரிக்கையை ஏற்று ஐ தே க, த. தே கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்திருந்தால் இன்று சிங்கள பேரினவாதத்தின் கோரப்பல் உடைந்திருக்கும். அந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் மத்தியில் அமைச்சுப்பதவியையும் மற்றும் சில பதவிகளையும் தக்க வைப்பத்றகாக கைவிட்டு விட்டது. அன்று நாம் சொன்னது இன்று உணரப்படுவதன் மூலம் உலமா கட்சி எப்போதும் சமூகத்துக்கான அரசியல் வழிகாட்டலை மிக சிறப்பாகவே செய்கிறது என்பது தெளிவாகியுள்ளது. எமது அரசியல் செயற்பாட்டில் இது வரை எந்தத்தவறும் ஏற்படாமல் இறைவன் எம்மை பாதுகாப்பது நாம் சுயநலனற்ற சமூக அரசியல் செய்வதனாலாகும்.

     இந்த அரசாங்கம் இனவாத அராஜக அரசு என ஹசனலி பகிரங்கமாக ஏற்றிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனாலும் அரசாங்கம் என்ற வகையில் அரசின் இத்தகைய இனவாத போக்கில் இவர்களுக்கும் பங்குண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் அரசியலுடன் இணைந்து செயற்படுவதாயின் அதன் தலைமை தென்னிலங்கையில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் இது சாத்தியப்படாது என்பதுடன் இது தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்தானதாகவும் அமைந்து விடும். மு. கா வின் தலைமை கிழக்கில் இருப்பதன் மூலம் அல்லது கிழக்கு முஸ்லிம்கள் தனியான முஸ்லிம் கட்சியில் ஒன்று படுவதன் மூலமே இதய சுத்தியுடனான தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லாமல் கட்டியெழுப்ப முடியும்.
இவற்றுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் முயற்சிக்காத வரை தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என முஸ்லிம் காங்கிரஸ் சொல்வது வெறுமனே ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி கதையாகவே முடியும் என எச்சரிக்கிறோம்.   

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar