இலங்கை, இந்திய முஸ்லிம்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஆயுதப் பயிற்சி அளிக்கிறது!
இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்களுக்கு ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஜனதா தள கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கும் மேற்படி அமைப்பு ஆயுதப் பயிற்சி அளித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்குள் அதிக அளவில் ஊடுருவியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தைக் கையாள கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
அண்மையில் தமிழக முஸ்லிம்கள்கூட ஈராக்கில் செயல்பட்டு வரும் கலிஃபா ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர். எனவே, தீவிரவாதிகள் ஊடுவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பின் 256-ஆவது பிரிவின் கீழ் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.