இலங்கைக்குள் இயங்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினது அனைத்து விதமான ஊடக செயற்பாடுகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை செய்துள்ளது. இதற்கான உத்தரவினை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்கத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் ஊடாக ஜூலை 1 ஆம் திகதி இடப்பட்டு அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையூடாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக செயலகத்தின் பணிப்பாளர் டி.எம்.எஸ். திஸாநாயக்க கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள இந்த அறிக்கையில் தடை குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துதல், ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சிப்பட்டறைகளை நடத்துதல் மற்றும் ஊடக அறிக்கைகளை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் இதன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குரிய நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. இதனால் இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக கைவிடுமாறு இந்த சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கமானது கடும் கட்டுப்பாடு விதித்திருந்தது. நாட்டில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்படவேண்டுமாயின் அதற்கு பல விதிமுறைகளை அரசாங்கம் கொண்டு வந்திருந்தது. இதனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்கமுடியாத சூழல் அன்று ஏற்பட்டிருந்தது. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் விடயத்தில் அப்போதிருந்ததைவிட சிறிதளவு தளர்வுப்போக்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடு ஒன்றுக்கு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு என்பது அவசியமாக உள்ளது. இலங்கையில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளன. இறுதி யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியாவிற்கு வருகை தந்த போது அரசாங்கத்தினால் அந்த மக்களுக்கான உரிய சேவைகளை முழுமையாக வழங்க முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணி பெரும் உதவியாக அமைந்திருந்தது. நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி பெருமளவான சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களே இந்த சேதங்களை மீளவும் கட்டியெழுப்ப பெரும் உதவி புரிந்திருந்தன. தற்போது யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நாட்டில் செயற்பட்டு வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தடைகளை விதிப்பதானது நாட்டுக்கு அவப்பெயரைக் கொண்டுவரும் விடயமாகவே அமைகின்றது.
அமெரிக்க அரசாங்கத்தின் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உதவித்திட்டத்தின் கீழ் நடத்தப்படவிருந்த வாக்காளர் கல்வியூடாக தேர்தல் ஒத்துழைப்பு என்ற தொனிப்பொருளிலான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வாக்குரிமை தொடர்பிலான நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டத்திற்கும் அரசாங்கமானது கடந்தவாரம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து யூ.எஸ்.எயிட் நிறுவனமானது வாக்காளர்களை அறிவூட்டும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான அரசாங்கத்தின் கெடுபிடியும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடகசெயற்பாடுகளுக்கு அரசாங்கமானது தடை விதித்துள்ளமை தொடர்பில் ஐ.நா. சபையும் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனைவிட அரசாங்கத்தின் இந்தத் தடையினை பல்வேறு அமைப்புக்களும் கண்டித்துள்ளன. இந்தத் தடை உத்தரவானது பரிகசிக்கத் தக்கது என்பதுடன் மிகவும் பயங்கரமானது என்று இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது.
இந்த தடையானது இலங்கையின் அரசியல் அமைப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதலாகும். அத்துடன் இந்த தடை இலங்கையானது சர்வாதிகாரப் போக்கில் சென்று கொண்டிருப்பதை தெளிவுபடுத்துகின்றது. இந்த நடவடிக்கை காரணமாக நாம் மிகவும் குழப்பமடைந்துள்ளோம். இந்த நடவடிக்கையை நாம் கண்டிக்கின்றோம் என்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு செய்தியாளர் மாநாடுகளை, செயலமர்வுகளை, ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதற்கு உரிமை இல்லையென பாதுகாப்பு அமைச்சு கருதுவது அரசாங்கத்தின் தடை மூலம் அம்பலமாகின்றது. ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் சகல அரசுகளும் இவ்வாறான சட்டபூர்வமான செயற்பாடுகளில் தமது பிரஜைகள் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை மதிக்கின்றன. சர்வாதிகார அரசுகள் மாத்திரம் இதனைத் தடுக்கின்றன. இலங்கை அரசு தனது ஜனநாயக இயல்புகளை பாதுகாக்க விரும்பினால் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை அனுமதிக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேபோல் அரசு சார்பற்ற நிறுவனங்கள் பலவும் அரசாங்கத்தின் தடை தொடர்பில் அதிர்ச்சி வெளியிட்டுள்ளன. அண்மையில் அரசு சார்பற்ற நிறுவனமான ட்ரான் பேரன்ஸி இன்டர் நெஷனல் என்ற அமைப்பின் இலங்கைக் கிளை நடத்திய ஊடகப் பட்டறைகள் திட்டமிட்ட வகையில் குழப்பப்பட்டிருந்தன. நீர்கொழும்பு மற்றும் தம்புள்ளைப்பகுதிகளில் இந்த அமைப்பானது கடந்த மாதமும் அதற்கு முன்னைய மாதமும் ஊடக பயிற்சிப்பட்டறைகளை நடத்தியிருந்தது. இந்தப் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்ற ஹோட்டல்களுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டங்களைச் செய்து இந்தப் பட்டறைகளை இடைநடுவில் குழப்பியிருந்தனர்.
இந்தப் பயிற்சிப் பட்டறைகளில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வெளிநாட்டு நிதியில் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இந்தப் பயிற்சிப்பட்டறை நடத்தப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்திய மாநாடுகள், ஊடகவியலாளர்களின் செயலமர்வுகள் திட்டமிட்டவகையில் குழப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அமைப்புக்களின் ஊடக செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை முன்னர் இடம் பெற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தின் தற்போதைய முடிவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான அரசாங்கத்தின் கடும் போக்கு செயற்பாடானது சர்வதேச ரீதியில் மேலும் நாட்டுக்கான அழுத்தத்தையே அதிகரிக்கும். எனவே, இந்த விடயத்தில் சிந்தித்து செயலாற்றவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
@வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்