திருகோணமலையிலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதன் மீள் நிர்மாணித்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரவிக்குமிடையில் திங்கட்கிழமை ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
கருமலையூற்று பள்ளிவாசல் நீண்ட கால வரலாற்றினை கொண்டதாகும். இப்பிரதேசம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இப்பள்ளிவாசல் உடைக்கப்பட்டதையிட்டு முஸ்லிம்கள்; பாதுகாப்புப் படையினர் மீது சந்தேகிக்கின்றனர்.
கடந்த சில காலங்களாக முஸ்லிம்களின் மதத்தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் கொத்தளித்துப் போய்யுள்ளதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
இதனை அடுத்து ஆளுநர், இப்பள்ளிவாசல் உடைப்பு விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து என்னிடத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்பள்ளிவாசல் உடைப்பு தொடர்பாக இராணுவக் கட்டளைத் தளபதியுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன் இவ்விடயத்தினை ஆளுநர் கவனமாக கையாளவுள்ளதாக தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment