BREAKING NEWS

அமைச்சர்களுக்கு புரியாணி கொடுத்து விட்டால் சமூகத்தை புரியாணியாக்கி ஏப்பம் விடலாம்

தமிழக முதல்வரை அவமானப்படுத்தியதற்காக தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அதற்காக மன்னிப்புக்கேட்ட அரசாங்கத்தை பேருவலை சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வைக்க அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளால் முடியவில்லை என்பது இலங்க முஸ்லிம் அரசியலின் கையாலாகா தன்மையை காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,


அண்மையில் வெளியான ஒரு கேலிச்சித்திரத்துக்காக தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கெதிராகவும் குரல் எழுப்பின. இதன் காரணமாக மேற்படி சம்பவத்துக்கு இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது. அதே வேளை இனவாதிகளின் உரைகள் காரணமாக திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட பேருவளை பகற்கொள்ளையை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமைக்காக அரசாங்கம் இது வரை பகிரங்க மன்னிப்புக்கேட்கவில்லை என்பதுடன் இதற்காக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான கட்சிகள் எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக இக்கலவரத்துக்கு முஸ்லிம்களே முதற்காரணம் என  அரச தரப்பு பாராளுமன்றத்தில் கூட பேசியது. இதற்கு பதிலளிக்கக்கூட முடியாத முட்டாள்களாக முஸ்லிம் கட்சிகள் இருந்தமை இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாரிய தலைகுணிவாகும்.
   
முஸ்லிம் அமைச்சர்கள் சமூகத்துக்காக எழுப்பும் குரலை விட தமது சொந்த சுய நலன்களுக்காக எழுப்பும் குரலே மிகையாகவும் உறுதியாகவும் உள்ளதனாலேயே அரசு முஸ்லிம் கட்சிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் உள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இந்த உண்மையை தெரிந்திருந்தும் இப்படியான சுயநலக்கட்சிகளை ஓரம் கட்டுவதற்கு மக்கள் ஒன்றுபடாதிருப்பது முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த பலவீனத்தை காட்டுகிறது.

அளுத்கம சம்பவங்களுக்கு அரசு மன்னிப்புக்கேட்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை முஸ்லிம் கட்சிகள் கொடுக்க வேண்டும் இல்லையேல் அந்தக்கட்சித்தலைவர்க ளுக்கான அழுத்தங்களை நாம் தருவோம் என்று கூறும் தைரியமோ, மனப்பக்குவமோ, சமூகப்பற்றோ முஸ்லிம் சமூகத்திடம் இல்லாதிருப்பதுதான் மிகப்பெரிய கைசேதமாக உள்ளது.  இந்த நாட்டின் ஜனநாயக ரீதியிலான அரசமைப்புச்சட்டத்தின் பிரகாரம் பொதுமக்களுக்களித்துள்ள கருத்துக்கூறலைக்கூட முஸ்லிம் சமூகம் தமது ஏமாற்று சுயநல அரசியல் தலைமளுக்கெதிராக பயன்படுத்துவதை காணமுடியவில்லை. இதன் காரணமாகவே பேரினவாதம் அடிக்கடி குட்டிப்பார்க்கும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இன்று ஆகியுள்ளது.

பொதுவாக முஸ்லிம்கள் புரியாணி தருவார்கள் ஆனால் ஓட்டு தரமாட்டார்கள் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் இன்று முஸ்லிம் அமைச்சர்களுக்கு புரியாணி கொடுத்து விட்டால் சமூகத்தை புரியாணியாக்கி ஏப்பம் விடலாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையிலிருந்து முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே காத்துக் கொள்வதாயின் இந்த சமூகத்தைக்காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் தலைமையிலான கட்சிகளை நிராகரித்து புதிய மாற்று ஜனநாயக சக்திகளை பலப்படுத்த முன் வரவேண்டும்.  

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar