பெளத்தத்தை அழிக்க முயன்றோரை தோற்கடித்ததும் நாமே:
“அரச வளங்களை விற்கின்ற அரசாங்கம் இதுவல்ல” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கடந்த ஆட்சிக் காலங்களில் விற்கப்பட்ட அரச வளங்களை மீள மக்கள் மயப்படுத்திய அரசாங்கமே தமது அரசாங்கம் எனவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், எரிவாயு நிறுவனம் செவனகல உட்பட பெரும் பட்டியலிடக்கூடிய அளவு நிறுவனங்கள் கடந்த அரசாங்கங்களின் காலத்தில் விற்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், அவற்றை மீள மக்கள் மயப்படுத்தியது தமது அரசாங்கமே எனவும் தெரிவித்தார்.
மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி, வீதிகள். நெடுஞ்சாலைகள். மின்சார வசதி என மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து வரும் அரசாங்கத்தின் அடுத்த இலக்கு நாட்டில் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதே எனவும் தெரிவித்தார். அடுத்த வருடத்தில் இது தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனத்தைச் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தளை மாவட்ட விசேட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று மாத்தளை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ. நிமல் சிறிபால டி சில்வா, ஜனக பண்டார தென்னக்கோன். பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் அரச அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கம் மக்களுக்காக மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலதிகமாக சிறு சிறு குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் முக்கிய கவனம் செலுத்துதல் அவசியம்.
மாத்தளை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் கல்வித் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் சற்று பின்னடைவு காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.
2016 ஆம் ஆண்டிற்குள் 100 இற்கு 75 வீதம் கல்வியறிவுள்ளவர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்கிணங்க நாட்டின் நான்கில் மூன்று வீதத்தினர் எழுதப் படிக்க தெரிந்தவர்களாக உருவாக்கப்படுவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மாவட்ட ரீதியில் பார்க்கும் போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 30 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் ஒதுக்குகிறது. அதற்கு மேலதிகமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 400 மில்லியன் ஒவ்வொரு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. இவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கான அபிவிருத்தியை முறையாக முன்னெடுக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
பிரதேச ரீதியில் சுயதொழில் மற்றும் கைத்தொழில் துறைகளில் பெண்கள் உட்பட பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கைகொடுத்து அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆவன செய்ய வேண்டும். அது பிரதேசத்தில் மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்களிப்பாக அமையும்.
மக்களுடனான சேவையில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்றோ அல்லது வேறு பேதங்களோ இருக்கக் கூடாது. அனைவரும் இணைந்து மாவட்ட முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்வது முக்கியமாகும்.
மாத்தளை மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாமல் உள்ள மாணவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட மக்கள் பிரதிநிதிகளால் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
Post a Comment