BREAKING NEWS

முஸ்லிம் கட்சிகள் ஊவா மாகாண முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என அக்கறை கொண்டிருந்தால்

ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்ற உண்மையான நோக்கம் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிடம் இருந்திருந்தால் அக்கட்சிகள் ஊவாவில் போட்டியிடுவதை தவிர்த்திருப்பதன் மூலம் இந்த உதவியை ஊவா முஸ்லிம்களுக்கு செய்திருக்க முடியும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.


இணையத்தள ஊடகத்தில் இடம் பெற்ற அரசியல் களம் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, பதுளை மாவட்டத்தில் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அரசுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கின்றன என்பதை எவரும் அறிவர்.

உண்மையில் இந்த முஸ்லிம் கட்சிகள் ஊவா மாகாண முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என அக்கறை கொண்டிருந்தால் தாம் போட்டியிடுவதில்லை என அறிவித்து விட்டு அங்குள்ள முஸ்லிம்களை  சுயேற்சையாக போட்டியிடும்படி  கூறியிருக்க முடியும். இதன் மூலம் பதுளை மாவட்ட முஸ்லிம்கள் கட்சிப்பிரச்சினைகள் இன்றி சுயமாக தனித்துவமாக தமது வேட்பாளர் ஒருவரை வெற்றியீட்ட செய்யலாம் என்பதுதான் ஜனநாயக தேர்தல் முறை பற்றி அறிவுள்ளவர்கள் எடுக்கும் முடிவாகும். ஆனால் முஸ்லிம் அமைச்சர்களின் தலைமையிலான கட்சிகள் பதுளை முஸ்லிம்களை வைத்து அரசாங்கத்திடம் தமது சுயநலன்களுக்காக விலை பேசியுள்ளார்கள் என்பதே உண்மையானதாகும்.

பதுளை மாவட்ட முஸ்லிம் மக்கள் தனியாக தேர்தலில் களமிறங்க வேண்டுமென்றே விரும்பினர். ஆனால் அமைச்சர் ஹக்கீம், ரிசாத் தலைமையிலான கட்சிகளும் தேர்தலில் குதித்து குட்டையை குழப்பி விடுவார்கள் என்று அச்சப்பட்டதன் காரணமாகவே நீங்கள் ஒன்று பட்டு வாருங்கள் என கூறப்பட்டது. தருணம் பார்த்திருந்த அரசாங்கம் தனக்கு சாதகமாக இத்தேர்தலை பயன்படுத்துவதற்காக ஒற்றுமை என்ற போர்வையில் ஹக்கீம் ரிசாத் அமைச்சர்களை கூட்டாக களமிறக்கியுள்ளது.

அரசுக்கு எதிரான தமிழ் கட்சிகள் பிரபாகரனின் துப்பாக்கியை கண்டு ஒற்றுமைப்பட்டன. அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகள் அரசின் எலும்புத்துண்டை கண்டு ஒற்றுமைப்பட்டுள்ளன.; தாங்கள் திரிசங்கு நிலையில் உள்ளோம் என அமைச்சர்கள் பாட்டுப்பாடுகின்றனர்.  சமூகத்தின் நிலை புரியாமல் தமது சுயநலன்களுக்காக விலை போனவர்கள் திரிசங்கு நிலையில்தான் இருக்க வேண்டும். ஊவா தேர்தலில் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தால் இந்தப்பாட்டுக்கள் தேவைப்பட்டிருக்காது என்பதுடன் எதிர்ப்பே இல்லாமல் பதுளை மாவட்ட முஸ்லிம் மக்கள் தமது உறுப்பினரை பெற்றிருக்க முடியும்.

இப்போது பதுளையில் களமிறங்கியுள்ள முஸ்லிம் அமைசசர்கள் இந்த அரசுக்கு பாடம் படிப்பிக்க இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும் என கோருவதுதான் மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது. முதலில் இந்த அமைச்சர்களும் அரசாங்கம் என்பதால் பதுளை மாவட்ட முஸ்லிம்கள் கையாலாகாத இந்த முஸ்லிம் அமைச்சர்கள் என்ற அரசுக்கு தகுந்த பாடத்தை வழங்க வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar