எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியேற்று நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்த பின் எந்த நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால்,
இது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, வரவுசெலவுத்திட்ட விவாதத்தை முன்கூட்டி நடத்துவதற்கு ஏதுவாக நிதிஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்னதாகவே பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இதற்கான திகதிகள் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலே தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆராயப்பட்டது. ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்துவது பற்றி ஆராயப்பட்டபோதும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
தேர்தல் எப்பொழுது நடந்தாலும் ஐ.ம.சு.மு வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களமிறங்குவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியாது என்று தெரிவிக்கப்படும் தர்க்கம் தொடர்பில் எமக்கு எந்தவித சட்ட ரீதியான சந்தேகமும் கிடையாது. இந்த விடயம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தால்தான் சட்ட வியாக்கியானம் வழங்க முடியும்.
இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியாது என்று ஆசிய நீதிபதிகள் சபை கூறியிருப்பதாக கரு ஜெயசூரிய எம்பி தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்க முடியாது. ஒருபோதும் அவர்கள் கரு ஜெயசூரியவிடம் அவ்வாறு கூறியிருக்க வாய்ப்பில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவானால் அவருக்கு சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் கிடைக்காது என்று முன்வைக்கும் தர்க்கத்தையும் ஏற்கமுடியாது. அத்தகையதொரு நிலையும் ஏற்படாது என்றார்.
Post a Comment