பலபேரை ஏமாற்றியவர் மடக்கிப்பிடிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் வீட்டுப் பணிப்பெண்கள் தங்களது பொருட்கள் மற்றும் பயணப் பொதிகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறும், கொள்ளையிடும் நோக்கில் சிலர்
செயற்படுவதால் பாதுகாப்பான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வீடு செல்லுமாறும் பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிலர் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பெண்களிடம் போலியான முறையில் நெருங்கிப் பழகி புறக்கோட்டை பஸ் நிலையத்தின் ஊடாக வீடு செல்ல முடியும் எனவும் குறைந்த செலவில் வாகனங்களை வாடகைக்கு அமர்த்த முடியுமென்றும் கூறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தரும் பெண்களிடம் இருந்து பொருட்களை களவாடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இவரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி, கடிகாரம், மடிகணனி, உட்பட மேலும் பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி நபர் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல் பயணப்பொதியுடன் அவ்விடத்தில் நின்று வெளிநாட்டில் இருந்து வரும் பெண்களிடம் தாமும் அந்த நாட்டில் இருந்ததாகவும், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசி குறித்த அந்தப் பெண்களை புறக்கோட்டை வரை அழைத்து வருவார்.
அதன் பின்னர் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை தாம் பார்த்துக் கொள்வதாகவும், தேனீர் மற்றும் ஏனைய தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வரை தாம் அந்தப் பொருட்களை பாதுகாத்துக் கொள்வதாக கூறி அவர்கள் ஹோட்டலுக்கு சென்ற பிறகு குறித்த நபர் பொருட்களுடன் மாயமாகி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இதுவரை 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எனவே, வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கள் பயணப்பொதிகளை கவனமாக வைத்துக் கொள்ளுமாறும், இவ்விதம் பொருட்கள் காணாமல் போனவர்கள் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.
Post a Comment