தமக்கு எதிராக சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் மக்களுக்குத் தெளிவுபடுத்தி யுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலையடுத்து தமக்கும் தமது குடும்பத்தினருக்கும், தமது அரசாங்கத்திற்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளையடுத்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எனது அரசாங்கத்திற்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவருக்கு எதிராகவும் குற்றஞ்சுமத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உரிய முறைமைகள் உள்ளன. எனினும் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கூடாக குரோதம் நிறைந்த சேறுபூசும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
இதற்கு முன் ஒருபோதும் இல்லாத வகையில் இடம்பெற்றுவரும் இத்தகைய அவதூறு நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்களை திசை திருப்புதல் நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இது தொடர்பில் தெளிவுபடுத்தலொன்றை மேற்கொள்ள விருபுகின்றேன்.
ஜனாதிபதி 9ம் திகதி காலையில் இராணுவ சூழ்ச்சிகள் மூலம் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சித்ததாக என்மீது குற்றச் சுமத்தப்படுகிறது.
எனினும் அன்று உண்மையில் நடந்த தென்ன என்பதை குறிப்பிட வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இறுதித் தருணத்திற்கு சில மணித்திய ¡லங்களுக்கு முன் அப்போதிருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின் நான் அலரி மாளிகையை விட்டு வெளியேறியமையே இடம்பெற்றது. இவ்வாறிருக்கையில் நான் சட்டவிரோதமாக அதிகாரத்தை வைத்துக் கொள்வதற்கு அதரசாங்கத்துக்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்ட மா அதிபரின் ஆலோச னையைப் பெற முயன்றதாகக் கூறும் கூற்று ஒன்றுக்கொன்று முரணானது. மிகவும் அருவருக்கத்தக்க குற்றச்சாட்டு என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன்.
இது தொடர்பில் புதிய ஜனாதிபதி அவர்கள் பொலன்னறுவையில் ஆற்றிய உரையைக் கேட்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன். பதவியிலிருந்து விலகிய பின்னரும் என்னால் அமைதி யாகவும் நிம்மதியாகவும் இருக்கக் கூடிய சூழ்நிலை இல்லை.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அலரிமாளிகையின் உட்புற காட்சிகளை ஊடகங்களினூடாக ஒளிபரப்பி நானும் எனது குடும்பமும் அரச செலவில் அதி சுகபோகமாக வாழ்ந்ததாக மக்களுக்குக் காண்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
குளிரூட்டப்பட்ட மலசல கூடம் தொலைக்காட்சியுடனான ஓய்வு பிரதேசம் போன்றவை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கும்.
2013 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பிற்காக அலரிமாளிகையின் சுற்றுச் சூழலின் ஒரு பகுதி வெளிநாட்டு தரத்திற்கமைய முழுமையாக மறுசீரமைக்கப்பட்டது என்பதை நாம் மக்களுக்குக் கூறவிரும்பு கின்றோம். மாநாட்டிற்கு வருகை தந்த அரச தலைவர்களுக்காக கண்காட்சி மற்றும் உணவு உபசரிப்புக்கள் அங்கு இடம் பெற்றன. கடந்த தசாப்தத்தில் இலங்கைக்கு வருகை தந்த அனைத்து அரச தலைவர்களும் அலரி மாளிகையிலேயே வரவேற்கப்பட்டனர். அவ்வாறான இடத்தில் இருக்க வேண்டிய வசதிகள் பொருத்தமானதாக இருப்பது முக்கியம்.
எனது அரசாங்கத்தினால் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் மற்றும் அரச நிதியை வீண் விரயமாக்கியமை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு மோசடிகளுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் ஒரு தரப்பினர் பொலிஸாரோடு சில இடங்களுக்கு பொலிஸார் இன்றி சென்று சிற்றிவளைப்புச் செய்ததை காணக்கிடைத்தது.
எனது உருவப்படத்துடனான ஒரு தொகை பிளாஸ்டிக் சுவர்க் கடிகாரம் சால்வையுடனான தேநீர் கோப்பைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் போஸ்டர்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டன. இதனை மட்டும் வைத்து அதிகாரத்தை தவறான முறையில் பாவித்ததாக மக்களுக்குக் கூற முயற்சித்தனர். எனினும் இது போன்ற பொருட்கள் பல நபர்களிடம் காணப்பட்டமை தவறு அல்ல என்பதை சகலரும் அறிவர்.
எனது மனைவி திறைசேரிக்கு சொந்தமான 100 கிலோ தங்கத்தை தவறான வழியில் விற்பதற்கு முயற்சித்தார் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் தற்போது பொலிஸார் பதில் வழங்கியுள்ளதால் அதுபற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை.
எனினும் திறைசேரிக்கு சொந்தமான தங்கத்தை ஜனாதிபதியின் மனைவிக்கு அன்றி திறைசேரியின் செயலாளருக்குக்கூட திருட்டுத்தனமாக விற்க முடியாதென்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment