புதிய அரசு உருவாகி முப்பது நாட்கள் தாண்டியும், முஸ்லிம் கட்சிகளுக்கு அமைச்சர்களும் கிழக்கு முதலமைச்சரும் கிடைத்தும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நுரைச்சோலை வீடுகள் இன்னமும் கிடைக்காமை பாதிக்கப்பட்ட
முஸ்லிம்களை எவரும் கருத்திற்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சஊதி அரேபியாவினால் 2006ம் ஆண்டு நுரைச்சோலையில் 500 வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டாம் என ஜாதிக்க ஹெல உறுமயவினால் வழக்கு தொரடப்பட்டதன் காரணமாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவினால் தனியாரு இனத்துக்கு என அல்லாது சகலருக்கும் அந்த வீடுகளை வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த வீடுகள் இன்னமும் வழங்கப்படாமல் பேய் வீடுகளாய் காட்சி தருகிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களில் முஸ்லிம்கள் மட்டுமே இன்னமும் வீடற்ற நிலையில் உள்ளார்கள் என்பதையும் ஏனைய இன மக்களும் இருந்தால் நீதி மன்ற தீர்ப்பின் பிரகாரமாவது இந்த வீடுகளை அனைவருக்கும் வழங்கும்படி உலமா கட்சியினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அது விடயமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எமக்கு பதில் அனுப்பியிருந்தார். ஆனால் அவர்தான் தனது வீட்டுக்கு போனாரே தவிர இந்த வீடுகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
தற்போது 98 வீத முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆடசிக்கு வந்த இந்த அரசாங்கமும் இது விடயத்தை கொஞ்சம்கூட பார்க்காமல் இருப்பது கவலை தருகிறது. இந்த வீடுகளை வழங்க விடாமல் அதாவுள்ளாவே தடுக்கிறார் என முஸ்லிம் காங்கிரஸ்காரர்களால் கூறப்பட்டது. அவர்களும் கடந்த அரசில் அமைச்சர்களாக இரந்தும் கையாலாகாதவர்களாகவே இரந்தனர். தங்களை சேவை செய்ய மஹிந்த விடுகிறார் இல்லை என அவர் மீது பழி போட்டனர். இப்போது இன்றைய ஜனாதிபதி மைத்திரி மீதும் தமது கையாலாகா தனத்துக்கு பழி போடுவார்களோ தெரியவில்லை.
தற்போது அதாவுள்ளா அமைச்சராக இல்லை என்பதால் அவரால் எத்தகைய தடையையும் இனி ஏற்படுத்த முடியாது. ஆனாலும் முஸ்லிம் கட்சிகள் தமது பதவிகள் பற்றியும் எதனை சுரட்டலாம் என்றும் கவலைப்படுகிறார்களே தவிர இப்படியான சமூக பிரச்சினைகள் பற்றி சிந்தி;ப்பதை காணவில்லை. மக்களும் இத்தகைய போலிகளுக்கு வாக்களித்து ஏமாறும் கூட்டமாகவே இன்னமும் இருப்பதுதான் இந்த சமூகத்தின் துரதிஷ்டமாகும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Post a Comment