BREAKING NEWS

புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 வது திருத்த சட்டமூலம், பாராளுமன்றத்திற்கு வருகிறது



19 வது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்திலேயே புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 வது திருத்த சட்டமூல வரைபு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் ஆசன எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்கும் வகையிலான இந்த அரசியலமைப்பு திருத்தம் சுதந்திர கட்சியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தாம் உள்ளடங்கிய நால்வர் கொண்ட குழுவினால் இந்த திருத்தம் ஏற்படுத்தப்பட்டதாகவும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சி புதிய தேர்தல் முறை தொடர்பில் மாற்றுக்கருத்தைக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கருத்து வெளியிடுகிறார்.

கலப்புமுறையிலும், விகிதாசார முறையிலும் தேர்தல் நடத்தப்படுமாயின் அதற்கு காலஅவகாசம் அவசியம் என தேர்தல்கள் ஆணையாளர் எம்மிடம் தெரிவித்தார்.

இது பற்றி ஆராயும் போது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு பிரச்சினையாக உள்ளது.
அத்துடன் ஆசன எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது, அதனை எந்த தொகையில் அதிகரிப்பது என்பது குறித்து பல பிரச்சினைகள் உள்ளன.

எனவே, இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் வகையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகவுள்ளது.

புதிய தேர்தல் முறை தொடர்பாக ஜே.வி.பி கருத்து வெளியிடுகையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான சட்டமூல வரைபை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும், அதுபற்றி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வில் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ்குணவர்தன இதுபற்றி கூறுகையில். நாளைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் சிலருடன் மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடலின் போது உத்தேச தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடவு;ளளதாக தெரிவித்தார்.
Jaffna Muslim

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar