BREAKING NEWS

சம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு:, முஸ்லிம்களின் காணிகள்?


சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கையொப்பமிட்டுள்ளார்.
சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ, முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தலைவர் உப்புல் ஜயசூரிய ஆகியோர் கூடி ஆராய்ந்திருந்தனர்.
சம்பூரில் உள்ள காணிகளை என்ன படிமுறையில் விடுவிப்பது, எவ்வாறு மீள்குடியேற்றங்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கமைய முதற்கட்டமாக சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு வழங்கிய 818 ஏக்கர் காணிகளை விடுவித்து அவற்றை மக்களின் மீள்குடியேற்றத்துக்கு வழங்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி நேற்றுமாலை கையொப்பமிட் டதாக சுமந்திரன் எம்பி கூறினார்.
முதற்கட்டமாக முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்ட 818 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கும் அடுத்த கட்டமாக கடற்படை முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டு வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டதும் சம்பூர் மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்றும் சுமந்திரன் எம்பி மேலும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar