BREAKING NEWS

20 விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கவும் முடிவு

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும்

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று (12) நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது. இதன் போது உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் எம்.பிக்கள் தொகை 225 ஐ விட கூடாது எனவும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு முன்னர் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பில் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் உடன்பாடு தெரிவித்துள்ள தாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
20 ஆவது திருத்தம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இது தொடர்பான சகல முரண் பாடுகளுக்கும் இன்று இறுதி முடிவு எட்டப்படும். சிறுபான்மை கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதால் தமது உரிமைகள் குறித்து இங்கு பேச வாய்ப்பு இருக்கிறது.
சிறுபான்மை கட்சிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. எம்.பிக்களின் தொகையை 225 ஆக பேணுவதற்கு ஐ. தே. க. கொள்கை ரீதியில் முடிவு செய்துள்ளது.
225 எம்.பிகளில் 25 பேர் தேசிய பட்டியலினூடாக தெரிவு செய்யப்படுவர். ஏனைய 200 எம்.பிக்களும் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையின் கீழ் தெரிவாவர். 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது போன்று இதனையும் நிறைவேற்றுவோம். 19 ஆவது திருத்தம் மற்றவரது அதிகாரத்தை குறைப்பதாகும். 20 ஆவது திருத்தம் தமது அதிகாரத்தைக் குறைப்பது, அதனால் இதனை எதிர்க்கின்றனர்.
20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் அவசரம் எமக்கு கிடையாது. ஜனாதிபதியே அது குறித்து முடிவு செய்வார்.
20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக ஐ. ம. சு. மு.விலுள்ள சில கட்சிகளே கூறுகின்றன.
20 ஆவது திருத்தத்தின் முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் தமது கையொப்பங்களை வாபஸ் பெறுவதாக சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் கூறியுள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி ஒரு போதும் சுதந்திரக் கட்சி எம்.பிகளை கோரவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி போன்று கொடூரமான ஆட்சி இன்று கிடையாது.
எம்.பிகள் தொகையை குறைப்பது தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளன. இது குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டு உடன்பாடு எட்ட எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிட முன்னர் ஐ. ம. சு. மு.வுடனும் 20 ஆவது திருத்தம் குறித்து பேசப்படும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar