மஹிந்த ராஜபக்ச காலத்தில் நாமல் ராஜபக்சவின் அரசியல் தலையீடு போன்று மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் தஹம் சிறிசேனவின் தலையீடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது புதல்வர் நாமல் ராஜபக்சவை இராஜதந்திர விவகாரங்களில் உடன் அழைத்துச் சென்றது போன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரியும் தனது புதல்வர் தஹம் சிறிசேனவை மெதுமெதுவாக அரசியலுக்குள் இழுத்து வருகின்றார்.
ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கான விஜயத்தின் போது தஹம் சிறிசேனவும் இணைந்து கொண்டிருந்ததுடன், இராஜதந்திர அந்தஸ்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்விலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எந்தவிதமான இராஜதந்திர அந்தஸ்தும் இல்லாத தஹம் சிறிசேன எவ்வாறு ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்துகொள்ள முடியும்? சொந்தப்பணத்தில் தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளாரா என்பன போன்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Post a Comment