BREAKING NEWS

வட்டார முறை என்ற மஹிந்த சிந்தனையை நீக்க சிறு பான்மை கட்சிகள் ஒற்றுமையாக வலியுறுத்த வேண்டும்

வட்டார தேர்தல் முறை சம்பந்தமாக நாளை நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டின் போது வட்டார முறை என்ற மஹிந்த சிந்தனையை நீக்கி விகிதாசார தேர்தல் முறையே தொடர்வதற்கு சிறு பான்மை கட்சிகள் ஒற்றுமையாக வலியுறுத்த வேண்டும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
உள்ளுராட்சி தேர்தலின் போது வட்டார தேர்தல் முறை என்பது கிழக்கு மாகாணத்துக்கு வெளியே உள்ள சிறு பான்மை மக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்பது அனைத்து கட்சிகளாலும், அறிவுள்ளவர்களாலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இவ்வாறான தேர்தல் முறை கடந்த ஆட்சியில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாம் கடந்த ஆட்சிக்கு ஆதரவளித்த நிலைமையிலும் இதற்கு சிறுபான்மை கட்சிகள் ஆதரவளிக்க வேண்டாம் என உரத்துக்கூறினோம். ஆனால் எமது குரல் சிறுபான்மை கட்சிகளுக்கு கேட்கவில்லை.
தற்போது கடந்த அரசின் மஹிந்த சிந்தனைகள் காலாவதயாகி விட்டன என கூறும் தற்போதைய நல்லாட்சி  அரசு வட்டார, தொகுதி முறை  தேர்தல் என்ற மஹிந்த சிந்தனையை மீண்டும் தலையில் தூக்கி வைப்பதன் மூலம் மஹிந்தவின் புகழ்பாடுகிறார்களா என தெரியவில்லை.
விகிதாச தோதல் முறையில் சில பாதகங்கள் இருந்தாலும் வட்டார தேர்தல் முறையில் அதைவிட பாரதூரமான பாதகங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு உள்ளன. ஆகவே இது சம்பந்தமாக நாளை நடைபெறும் சர்வ கட்சி மாநாட்டில் சிறு பான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு இத்தேர்தல் முறையை நீக்க குரல் கொடுக்க வேண்டும். அதே போல்; ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மை மக்களின் உரிமைகளை கருத்திற்கொள்வதில்லை என்ற அவப்பெயரை இனியும் நீக்கு முகமாக இது விடயத்தில் கவனம் செலுத்தி வட்டார, தொகுதி தேர்தல் முறை என்ற மஹிந்த சிந்தனையை முற்றாக ஒழித்து பழைய விகிதாசார முறையை தொடர முன்வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar