BREAKING NEWS

கபீர் ஹாஷிம் அவர்களின் மீலாத் தின வாழ்த்துச் செய்தி


(அஷ்ரப் ஏ சமத் )

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளாரும்  அமைச்சர் அல் - ஹாஜ் கபீர் ஹாஷிம் அவர்களின் மீலாத் தின வாழ்த்துச் செய்தி.

கண்மணி நாயகம் இறுதி இறைதூதர் முகம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் அவதரித்த இந்த ரபிய்யுல் அவ்வல் மாதம் இதில் இலங்கைத் திருநாட்டின் மீது எல்லாம் வல்ல றஹ்மானின் அருள் மாரி உண்டாவதாக. அகிலத்திற்கோர் அருட்கொடையாக அவதரித்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பல்லின சமூகங்கள் வாழுகின்ற இலங்கை போன்ற ஒரு தேசத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகும். பல கோத்திரத்தாரும் பிற மத சமூகத்தவர்களும் வாழ்ந்த மதீனாவின் பூமியிலே ஓரிறைக்கோட்பாடு எனும் மூலமந்திரத்தின் அடிப்படையின் மீது ஸ்திரமான சமூகக் கட்டுமானத்தையும் நேர்மையான அரசு ஒன்றினையும் நிறுவிய வெற்றிகரமான தீர்க்கதரிசியாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அரசியலுக்கான ஆன்மீகம் என்றில்லாமல் ஆன்மிக அடிப்படையில் அரசியலை நிர்மாணம் செய்த ஏக சாதனை உலக வரலாற்றில் உன்னதமான இடத்தைப் பிடித்திருக்கிறது. வணிகம், ராஜதந்திரம், போரியல், அரசியல் போன்ற மிகவும் சிக்கலான துறைகளில் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் தனது நுணுக்கமான பார்வைகளின் மூலம் புதிய மரபுகளையும் சித்தாந்தங்களையும் தோற்றுவித்த ஓர் அவதார புருஷராகவே அவர்களை பார்க்க வேண்டிய இருக்கிறது. இன்றைய இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு விடைகாண இறுதி இறைதூதரின் அணுகுமுறைகள் சாலப் பொருத்தமானதே கி.பி. ஆறாம் நூற்றாண்டில் நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த பாலைவன நாடோடி அரபிகளை பாராளும் கீர்த்தி மிக்க அரசர்களாக மாற்றிய வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரராக அவர் திகழ்ந்தார். உலகில் தோன்றிய அனைத்து மன்னர்களையும் விட நேர்மையாளராக பூமியில் உதித் தீர்க்கதரிசிகள் மெய்ஞானிகள் அனைவரையும் விட வெற்றிகரமானவராகவும் முகம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் சாதித்துக் காட்டினார்கள். பல யுத்தங்களில் தளபதியாகப் பணிபுரிந்து ராணுவத்தை வழிநடாத்தி யுத்த தர்மத்தையும் யுத்தக்கைதிகளை கையாளும் வழிமுறைகளையும் கூறி ஐ.நா.வின் சாசனத்திற்கே வித்திட்ட பெருமை அவருக்கே உரித்தானது. இன்று இலங்கை யுத்தக்கைதிகள் தொடர்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் அவர்களின் வழிமுறைகளை ஆய்வு செய்து பிரயோகிப்பது இலங்கையின் எதிர்காலத்தை வளப்படுத்தும் என்றும் கௌரவ அமைச்சர் அவர்கள் மீலாத் தின சிறப்புச் செய்தியாகவும் அறிவித்தார்.

அமைசச்ர் கபீர் ஹாசீம் பா.உ

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar