BREAKING NEWS

வெலிஓய பிரதேச மக்களுக்கென ஆயிரம் வீடுகள்

Ashraf



வெலிஓய பிரதேச மக்களுக்கென ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கும், இளைஞர் யுவதிகளின் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் இன்னும் ஆறு மாதத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கும் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.
வெலிஓய ஜனகபுர கிராமத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கிரி இப்பன்வெவ விகாராதிபதி திலகலங்கார தேரர், நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் திருமதி.மஞ்சு, வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்க ஆகியோரும் உரையாற்றினார்.
அமைச்சர் இங்கு உரையாற்றிய போது மேலும் கூறியதாவது,
யுத்தத்தினால பாதிக்கப்பட்டவர்களில் வெலிஓய மக்களும் முக்கியமானவர்கள். புலிகளின் அச்சுறுத்தலுக்கும் கொடுமைகளுக்கும்  மத்தியில் இவர்கள் வாழ்ந்தவர்கள்.
கடந்த 30 வருடகாலமாக இந்த மக்கள் பட்ட துன்பங்கள் அதிகம். அவர்களின் துன்பங்களிலும், இன்பங்களிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பங்கேற்றிருக்கின்றேன். அவர்களின் கஷ்டங்களுக்கு நான் உதவியுள்ளேன். யுத்தகாலத்தில் உயிரையும் பொருட்படுத்தாது இந்தப் பிரதேசத்துக்கு வந்து நான் உங்களுக்கு முடிந்ததைச் செய்துள்ளேன். இந்த மக்களின் கல்விப் பிரச்சினைகள், வீட்டுப் பிரச்சினைகள், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற உழைத்துள்ளேன். அத்துடன் இங்குள்ள விகாரைகளின் குறைபாடுகளை நீக்க என் பங்கினை நல்கியுள்ளேன். தொடர்ந்தும் இந்த மக்களுக்கு நான் பணி செய்வேன். அதற்காகவே  இந்தப் பிரதேசத்துக்கு வந்துள்ளேன்.  தேர்தல் காலத்தில் நான் வழங்கிய வாக்குறுதிகளை உங்களுக்கு நிறைவேற்றித் தருவேன். சில வேலைத்திட்டங்கள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் இந்தப் பிரதேசத்து மக்களின் தேவைகளை கவனிக்க தனியான பிரதேச செயலகம் ஒன்றை அமைத்துத் தர நடவடிக்கை எடுத்தேன். தனியான பிரதேச செயலகம் இல்லாது நீங்கள் பட்ட அவஸ்தைகள் எனக்கு தெரியும். பதவியாவுக்கும் வவுனியாவுக்கும் அலைந்து திரிந்தீர்கள். இப்போது உங்களுக்கு அது இலகுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் வெலிஓய பிரதேசத்துக்கென தனியான பிரதேச சபை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் நாம் இறங்கியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் றிசாத் வெலிஓய பிரதேசத்தின் கிராமங்களான ஹெலம்பவெவ, கிரி இப்பன்வெவ, சம்பத்நுவர, நவ மொனரவெவ, கல்யாணிபுர ஆகியவற்றுக்கும் விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டரிந்தார். மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு கூரைத்தகடுகள், கதிரைகளையும் வழங்கி வைத்தார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar