BREAKING NEWS

'கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பம் ???

'கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்!
---------------------------கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கும் உயர்மட்டக் கூட்டம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை  மாநகர சபை கட்டிடத் தொகுதியில் (15) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இவ் உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்றது.

கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் உடன் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. இதற்காக அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் விரிவாக ஆராயப்பட்டு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அதற்கான மதீப்பீட்டு அறிக்கைகள் உடன் தயாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கும் அதற்கான நிதிகளை ஒதுக்கிடுவதற்கு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதலில் காணி நிரப்புவதற்கும், சாய்ந்தமருது வொலிவோரியனிலிருந்து கல்முனை நூலகம் வரை புதிய காபெட் வீதி அபிவிருத்திக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை இறைவெளிக் கண்டத்திலுள்ள 13 ஏக்கர் காணி, சாய்ந்தமருது கரைவாகு வட்டையிலுள்ள 23 ஏக்கர் காணி, கல்முனை பாண்டிருப்பிலுள்ள 5 ஏக்கர் காணி, மருதமுனை மோட்டு வட்டை காணி ஆகிய காணிகளை நிரப்புதற்கு 600 மில்லியம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை காணி மீட்பு கூட்டுத்தாபனம், அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தினூடாக மேற்கொள்ளவுள்ளது.

மேலும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி உடன் நடைமுறைபட்டுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சாய்ந்தமருது அல் - ஹிலால் வீதி, பழைய தபாலக வீதி, மாளிகா வீதி, பழைய வைத்தியசாலை  வீதிகளிலுள்ள பாலங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மேலும் கல்முனை மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு நிரந்தரமான தீர்வும் எட்டப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கட்டிடத்துக்கான காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் நிர்மாணத்திற்கு பொதுநிர்வாக அமைச்சினூடாக 69 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக சாய்நதமருது புதிய பிரதேச செயலக கட்டிடம், வீதி அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி, நூலக அபிவிருத்தி, அரச காரியாலயங்கள் போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், சுகாதர சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், கே.எம்.ஏ.றஸ்ஸாக், ஏ.எல்.தவம், கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் நிசாம் காரியப்பர், முன்னாள் பிரதி மேயர் முழக்கம் ஏ.எல்.ஏ.மஜீத், முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

- ஊடகப் பிரிவு -

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar