பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனா ஏறாவூருக்கு விஜயம் செய்வது அம்மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கையாகும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்ததாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக ஏறாவூர் உள்ளது. புலிகள் காலத்தில் மிக மோசமாக உயிர் உடமை என பாதிக்கப்பட்ட ஊர் ஏறாவூர். பயங்கரவாதம் இல்லாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகளின் உதவியின்றியே வளம் சிறக்கக்கூடிய ஊராக ஏறாவூர் இருந்தது. இம்மக்கள் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அமோகமாக வாக்களித்து மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் கட்சியின் தலைவர் அமைச்சரவை அமைச்சர் என பெற்றும் இன்னமும் குறிப்பிடக்கூடிய அபிவிருத்தி பெறவில்லை. ஒழுங்கான தரமான பாடசாலைக்கட்டிடங்கள் கூட இல்லாத நிலையில் உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிநிதியாக இருந்த மாகாண சுபைர் சுபைர் சில விடயங்களை ஏறாவூக்கு செய்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஏறாவூரின் குடிசை வாழ் மக்களுக்கு உலமா கட்சியும் தனது தகுதிக்கேற்ப ஆறு கிணறுகளை வழங்கியது.
அதே போல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைச்சர் அமீரலி, மாகாண சபை உறுப்பினர் சுபைர் போன்றோரால் தனியான கல்வி வலயம், வைத்தியசாலை என்பன போன்ற பல அபிவிருத்திகள் வழங்கப்பட்டன. ஆனால் இன்றைய அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளால் ஏறாவுர் எதையும் பெறாமல் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சகல அதிகாரமும் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் உருப்படியாக அம்மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது ஜனாதிபதியை அழைத்து வந்து தமது கையாலாகா தனத்தை மறைப்பதற்காக அப்பாவி ஏழை மக்களுக்கு படம் காட்டுவதற்கு முயல்வதாகவே தெரிகிறது. இதற்கெல்லாம் முஸ்லிம்கள் மயங்கிய காலம் போய் விட்டது என்பதில் ஏறாவூர் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று இரண்டு வருடம் பூர்த்தியாகியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு எந்தவொரு தீர்வும் இது வரை வழங்காத நிலையில் ஆயிரம் ஏக்கர் நிலத்தையாவது விடுவித்து வட்டு வருவாரானால்; அவரது வருகையை நாம் பாராட்டலாம். ஆனால் அதையும் செய்யாமல், ஜனாதிபதி தரப்பில் எதையும் செய்யாமல், கல்விக்கூடங்களுக்கு கூட தரமான பௌதீக வசதி வழங்காமல் ஜனாதிபதியை முஸ்லிம் காங்கிரஸ் அழைத்து வருவது வெட்கக்கேடானதாகும்.
இன்று சிங்கள மக்கள் தொண்ணூறு வீதம் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் நிலையில் ஜனாதிபதியால் சிங்கள மக்களிடம் சென்று அவர்களை ஏமாற்ற முடியாத சூழ் நிலை உருவாகியுள்ளதால் முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரிகள் என நினைத்துக்கொண்டு இவ்வாறு செயற்படுவது கண்டிப்புக்குரியதாகும்.

Post a Comment