BREAKING NEWS

மாற்று! மாறவில்லையா துரத்து !

.
--------------------------------------------------------------------------
எனது பார்வையில் ..
எமது போராட்டம் இழந்த இரண்டு வருடங்கள்.
--------------------------------------------------------------------------
கல்முனை மக்களாகிய நாம் வரிந்து கட்டிக்கொண்டு 90% வாக்களித்து கொண்டுவந்த நல்லாட்சி இன்றுடன் இரண்டு வருட பூர்த்தியை காண்கின்றது. எந்த ஒரு ஆட்சியை கவிழ்க்க நாங்கள வாக்களித்தோமோ அந்த ஆட்சியின் அதிபர் முன்னாள் ஜனாதிபதி "2017 ல் ஆட்சியை கவிழ்ப்பேன்" என்று சூளுரைக்கின்ற அளவுக்கு இன்றைய நல்லாட்சி நலிவடைந்திருக்கிறது.

அன்றிருந்த பேரினவாத அத்துமீறல்களுக்கு சாவுமணி அடிக்கவேண்டுமென்றே அன்றைய அரசை மாற்றியமைத்த நாம், இன்றைக்கு அந்த அதே பேரினவாத அத்துமீறல்கள் என்றுமில்லாதவாறு மேலோங்கியிருக்கின்ற போதிலும் எதனையும் செய்ய முடியாது மௌனிகளாகி விட்டோம்.

இன்றுவரை தமிழ் தேசியவாதத்தினாலும் சிங்கள பேரினவாததினாலும் கருத்தில் எடுக்கப் படாமல் இருக்கின்ற அல்லது மறுதலிக்கப்பட்டுவருகின்ற எமது சமூகத்தின் அபிலாசைகள் எதனையும் நாங்கள் அடைந்ததாகவும் இல்லை. அதற்கான நம்பிக்கையும் தென்படவில்லை.

இனபிரசினை தீர்வுகளில் நாம் மூன்றாம் தரப்பென்றும், கல்முனை கரையோர மாவட்டம் என்றும் மற்றும் எமக்கான தனியான மாகாண அலகு என்றும் ஆரம்பித்த எமது முஸ்லிம் தேசிய அரசியல் எழுச்சிப் போராட்டமானது, எமது சமூகத்தின் ஆயிரக்கணக்கான உயிர்களையும், பத்தாயிரக் கணக்கான ஏக்கர் காணிகளையும் பில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களையும் இழந்து லட்சக் கணக்கான அகதிகளையும் உருவாக்கிய நிலையில், அதனது தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவோடு நலிவடைந்து போயிற்று.

பல தியாகங்களின் மத்தியிலும் இழப்பு இன்னல்கள் மத்தியிலும் நாம் வளர்த்து கட்டிக் காத்து வந்த அரசியல் போராட்டம் அதனது தளபதியின் மறைவோடு, குரங்கின் கழுத்தில் விழுந்த பூமாலைபோல, சில குண்டர்கள் கையில் மாட்டிகொண்டு சின்னாபின்னப்பட்டு அர்த்தமற்றுப் போயிருக்கின்றது.

அரசியல் அமைப்பு மாற்றம், எல்லை மீள்நிர்ணயம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் என்றெல்லாம் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்ற இந்த ஆண்டில், இந்த மாற்றங்களினால் எமது சமூகம் பெற இருக்கின்ற அல்லது இழக்க இருக்கின்ற எந்தவொரு விடயங்கள் பற்றியும் தெளிவற்றவர்களாக அல்லது ஒரளவு தெளிவு பட்டாலும் மறுக்கப்படும் அவற்றை போராடிப் பெற்றுக் கொள்ளும் நாதியற்றவர்களாகவே நாம் இருக்கின்றோம்.

கல்முனை பிராந்தியத்தில் அடையாளப்படுத்தப் பட்ட அபிவிருத்திகள் ஆயிரமிருக்க, இந்த இரண்டு வருடங்களில் ஐந்து விளையாட்டு மைதானங்களுக்கு பகுதியாக சுற்று மதில் அமைத்திருக்கின்றோம். என்ன பெரிய சாதனை இது. இவர்கள் வெட்கித்து தலை குனியத் தேவையில்லையா ?

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த இரண்டு வருடங்களாக ஒரு தேசியப் பட்டியல் விவகாரத்தை மட்டுமே கூடிப் பேசி காலம் கழித்த இன்றைய "போராளிகள்" தேர்தல் திகதி ஓன்று நிச்சயிக்கப் பட்ட மாத்திரத்தில் பண மூட்டைகளோடும் பொய் மூட்டைகளோடும் வந்து இறங்குவர். இதுவரைக்கும் எமது பிரச்சினைகள் தொடர்பாக ஒரு ஆணியைக்கூட புடுங்கிவிடாத இவர்கள் பதினாறு வருடங்களாக சொல்லிவருகின்ற அதே பொய்களை ஆரம்பத்தில் இருந்து சொல்வர். அதற்கும் நாம் அல்லாஹு அக்பர் சொல்வோம்.

இன்னும் எத்தனை நாள்
இப்படியே இருக்கப் போகின்றாய் ?

மாற்று!
மாறவில்லையா துரத்து !
allele Rahman 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar