BREAKING NEWS

இடைநிறுத்தப்பட்டுள்ள தோணா அபிவிருத்தியின் பக்கம் அமைச்சர் ஹக்கிமின் கவனம் திரும்புமா???


-எம்.வை.அமீர் வங்களாவடி நிருபர்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு, சுமார் 160.2 மில்லியன் ரூபாய்களை முதற்கட்ட அபிவிருத்திப்பணிக்காக நகர திட்டமிடல் அமைச்சின் ஊடாக ஒதுக்கீடு செய்து குறித்த பண ஒதுக்கீட்டை அமைச்சரவையும் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சாய்ந்தமருது தோணா அபிவிருத்திப்பணிகள்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நகர திட்டமிடல், நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீமுடைய நேரடி கண்காணிப்பில் குறித்த அபிவிருத்திப்பணிகள் தொடராக இடம்பெறும் என பல சந்தர்ப்பங்களில் தலைவரினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் திடீரென கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது பிரதேச மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அபிவிருத்திப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறித்து நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளும் அரச காணிமீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளரிடம் வினவியபோது நகர திட்டமிடல் அமைச்சிலிருந்து அரச காணிமீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு உரிய பணம் கைமாறாமல் இருப்பதே காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக வினவுவதற்காக அமைச்சர் றவூப் ஹக்கீமுடைய இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
பல வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருந்த சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித் திட்டமானது தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே மக்களின் ஆதங்கமாகும். இம்மக்களின் ஆதங்கங்களை அமைச்சர் கருத்தில் கொள்வாரா?........

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar